"15 ஆண்டுகளில் மோசம்.." சென்னையில் முடிவுக்கு வரும் வெப்பம்.. மழை எப்போது? வெதர்மேன் ஸ்வீட் நியூஸ்
சென்னை: கடந்த இரண்டு மாதங்களாகச் சென்னையில் வெயில் வைத்துச் செய்த வந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், எப்போது சென்னையில் மழை ஆரம்பிக்கும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு சென்னையில் அதிக முறை 40 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைத் தாண்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

நேற்று கூட சென்னையில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இப்போது மாநிலத்தில் பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில், வெப்பம் படிப்படியாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தலைநகர் சென்னையில் இன்றுடன் 40+ டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாவது முடிவுக்கு வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் ஏற்கனவே கூறியிருந்தார். இதற்கிடையே இப்போது அவர் வேறு சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அதாவது இந்தாண்டு மட்டும் சென்னையில் இதுவரை 18 நாட்களில் 40+ டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை மாநகரில் பயங்கர வெப்ப அலை வீசுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் - 2023, 2019, 2012, 2008 ஆகிய ஆண்டுகளில் தான் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டை உள்ளடக்கிய பகுதிகளில் வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளன. கடந்த ஆண்டு 2019க்கு இணையாக இந்தாண்டு வெப்பம் மோசமாக இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
இதுதான் மோசம்: மேலும், கடந்த 15 ஆண்டுகளில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்னையில் எந்தெந்த நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இதில் 2008 முதல் கடந்த 15 ஆண்டுகளில் 2023, 2019, 2012, 2008 ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருந்துள்ளது. அதிகபட்சமாக 2012 மற்றும் 2019 ஆண்டுகளில் சென்னையில் மொத்தம் 20 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.
அதற்கு அடுத்து இந்தாண்டிலும் 18 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. அதேபோல 2008ஆம் ஆண்டிலும் இதேபோல 18 நாட்கள் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. இருப்பினும், அப்போது மே மாதம் தான் 16 நாட்கள் வெப்பம் 40 டிகிரியை தாண்டியிருந்தது. ஜூன் மாதம் வெறும் 2 நாட்கள் மட்டுமே வெப்பம் 40 டிகிரியை தாண்டியிருந்தது. ஆனால், இந்தாண்டு ஜூன் மாதமே வெப்பம் கடுமையாக இருந்துள்ளது.
எப்போது அதிகம்: அதாவது, ஏப்ரல் மாதம் எந்தவொரு நாளும் 40 டிகிரி செல்சியஸை தாண்டவில்லை. அதேநேரம் மே மாதம் 5 நாட்களும், ஜூன் மாதம் 13 நாட்களும் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக இந்த மாதம் சென்னையில் 42.3 டிகிரி செல்சியஸ் (108 டிகிரி பாரன்ஹீட்) வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
இதன் பிறகு வெப்பம் படிப்படியாகக் குறையும் என்றே வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் இப்போது எல் நினோ உருவாகும் நிலையில், அடுத்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் இதைவிட மோசமாக இருக்கும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எல் நினோ முடியும் வரையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு வெப்பம் மோசமாகவே இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை: அதேபோல சென்னையில் எப்போது மழை ஆரம்பிக்கும் என்பது குறித்தும் வெதர்மேன் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில், "வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை முதல் மழை ஆரம்பிக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இரண்டு மாதங்களாக நம்மை வைத்துச் செய்த வெப்பம் குறையும் என்பதே சென்னைவாசிகளுக்கு நல்ல செய்தியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications