19 ஆம் தேதி வரை மழையா? ஒரு வேளை இது அதுவாக இருக்குமோ? வெதர் ரிப்போர்ட்டை விவாதிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என்ற யூகங்கள் நிலவி வரும் நிலையில் வரும் 19ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வரும் 17ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது 19ஆம் தேதி வலுப்பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகரக் கூடும். இதனால் தமிழகத்தின் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது அந்தந்த நாளில் பெய்த மழை, அதன் பாதிப்புகளை பொருத்தே விடுமுறை அளிப்பதா இல்லையா என்பது குறித்து தெரியவரும். சிகப்பு எச்சரிக்கை விடுத்தால் மட்டுமே முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்படுமே ஒழிய மற்ற நேரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பது மழையின் பாதிப்பை பொருத்தே அமையும்.
தென்மேற்கு பருவமழை தற்போதுதான் விலகத் தொடங்கியுள்ளது. இது முழுவதுமாக விலகினால்தான் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் அமையும். எனவே அக்டோபர் 3 ஆவது அல்லது 4 ஆவது வாரத்தில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் 20ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் அதற்கான முத்தாய்ப்பாக இந்த மழை இருக்குமோ என பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் வானிலை நிலவரம் குறித்து இன்றைய தினம் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 15.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18.10.2023 முதல் 21.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications