தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை.. வானிலை மையம் குட் நியூஸ்! சென்னையில் என்ன கிளைமேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் கணிசமாகக் குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் ஓரளவுக்கு நல்ல மழை இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் கூட வெப்பம் கடுமையாகவே இருந்தது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் இந்த மாதம் மட்டும் சுமார் 15 நாட்கள் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது. அந்தளவுக்கு வெப்பம் மிகவும் மோசமாக இருந்தது.
மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது. வழக்கமாக மே மாதமே வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தாண்டு ஜூன் மாதம் வெப்பம் உச்சத்தில் இருந்தது.
சட்டென மாறிய வானிலை: இதனால் வேறுவழியின்றி பள்ளிகள் திறப்பு கூட ஒத்திவைக்கப்பட்டது. இதனால் வழக்கமாகப் பெய்ய வேண்டியதைக் காட்டிலும் மழை குறைவாகவே பெய்திருந்தது. இருப்பினும், இந்த வாரம் திடீரென வானிலை அப்படியே மாறியது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. சில மாதங்களாக அதீத வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்க மழை மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழையைக் காட்டிலும் இப்போது கூடுதல் மழை பெய்துள்ளது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 23) மற்றும் நாளை (ஜூன் 24) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை எப்படி இருக்கும்: அதேபோல வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூன் 27.06.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி தாலுகா அலுவலகத்தில் 110மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல கிருஷ்ணகிரி ஜம்புகுட்டப்பட்டியில் 90 மிமீ மழை, புதுக்கோட்டை பெங்களூரில் 80மிமீ மழை பெய்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மேலும், வரும் நாட்களில் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளிலும், ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications