சூழ்ந்த மேகங்கள்.. மாறிய வானிலை.. அடுத்த 4 நாட்கள் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? வெதர்மேன் அப்டேட்!
சென்னை: அடுத்த நான்கு - ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் தீவிர மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் மாநிலங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர், பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் சென்னை, உள் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை மைய அறிக்கையின்படி, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை
இன்று தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு
இந்த நிலையில்தான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அப்டேட்டில், அடுத்த நான்கு - ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் தீவிர மழை நாட்கள் தொடரும். சென்னைக்கு மேக கூட்டம் கடலில் இருந்து வருவதால் அடுத்த நான்கு நாட்கள் சிறிய அளவிலான மழை பெய்யும். நேற்று கோவை, திருப்பூர், விருதுநகர், திண்டிவனம், தேனி, மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

கொடைக்கானல்
கொடைக்கானல் கடந்த 24 மணி நேரத்தில் மழையில் இரட்டை சதம் (200 மிமீ) போட்டுள்ளது. இப்போது அங்கு காற்று வீசுவதால் கொடைக்கானல், குன்னூர், வால்பாறை செல்வதை தவிர்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக கொடைக்கானலில் இது போன்ற மழையை தென் மேற்கு பருவமழை காலத்தில் பார்த்ததே இல்லை. அங்கு மழை இதுவரை இல்லாத புதிய ஆகஸ்ட் மாத ரெக்கார்டை படைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம்
ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கொடைக்கானலில் மழை பெய்துள்ளது. இன்றும் அதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. மேற்கு மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும், டெல்டாவில் கூட நல்ல மழை பெய்யும். சென்னைக்கு மீண்டும் மழை நாட்கள் திரும்பி உள்ளது. சிறிய அளவில் ஆங்காங்கே மழை பெய்யும். வானிலையை கொண்டாடுங்கள், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications