ஈரம் கசிந்தது.. விபத்தில் சிக்கிய வட மாநில மக்கள்.. பதறியபடியே தூக்கி கொண்டு ஓடிய நம் தமிழக இளைஞர்கள்
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஒரு உன்னது உணர்வு என்பதும் புலப்பட்டு கொண்டேயிருக்கிறது..
ராணிப்பேட்டை: விபத்தில் சிக்கிய வட மாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இதுவரை 12 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவியது. அதற்கேற்றார் போல தமிழ்நாட்டில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல தொடங்கினர். இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து, தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் தொடுக்கப்படுகிறது என்று பீகார் பாஜக குற்றம்சாட்டியது.
அம்மாநில சட்டமன்றத்தில் இது தொடர்பாக அமளியை கிளப்பிய பாஜக இந்த விவகாரத்தில் பீகார் மாநில அரசும் துணை நிற்பதாக குற்றம்சாட்டியது. இதற்கு ஆதாரமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பீகார் துணை முதலமைச்சர் தேஸ்வியாதவ் பங்கேற்றிருந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பீகார் அரசு உறுதியாக மறுத்ததோடு, தமிழ்நாடு காவல்துறை அளித்த விளக்கத்தையும் சுட்டிக்காட்டியது.

குற்றச்சாட்டு
அதாவது இந்த இரண்டு வீடியோக்களில் ஒன்று பீகார்-ஜார்க்கண்ட் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் என்றும், இன்னொரு வீடியோ தமிழ்நாட்டில் நடந்த உள்ளூர் மக்களுக்கிடையேயான மோதல் என்றும் தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்திருந்தது. இதனை சுட்டிக்காட்டிய பின்னரும் பீகார் பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அம்மாநில அரசு, அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் டி.பாலமுருகன், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலோக் குமார் மற்றும் பீகார் காவல்துறை தலைவர் பி.கண்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆய்வு
இக்குழு நேற்று முன்தினம் சென்னை வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. இதனையடுத்து நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை திருப்திகரமாக இருந்ததாக பீகார் அதிகாரிகள் கூறியிருந்தனர். பின்னர் பீகார் இளைஞர்கள் தங்கியிருந்த பகுதிகளில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதேபோல குடும்பத்துடன் தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்ற தொழிலாளர் ஹோலி பண்டிகை கொண்டாட செல்வதாகவும், பண்டிகை முடித்து தமிழ்நாடு திரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

விபத்து
நிலைமை இவ்வாறு இருக்கையில், ராணிப்பேட்டையில் சாலை விபத்தில் படுகாயமடைந்த வடமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் மீட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை பீகார் மாநில தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் 15 பீகார் தொழிலாளர்கள் சிப்காட்டில் உள்ள வாரச்சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு காரை பகுதிக்கு மினி வேனில் திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கழிந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

மீட்புப்பணி
இதனை பார்த்த தமிழக இளைஞர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். இந்த விபத்தில் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்த இளைஞர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல கவிழ்ந்த வேனையும் தூக்கி நிறுத்தி வடமாநில இளைஞர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழக இளைஞர்களின் இந்த பணி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications