ஆர்எஸ்எஸ் கும்பலை விரட்ட.. அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்! தமிழக வாழ்வுரிமை கட்சி அழைப்பு
சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், பன்முகத்தன்மையையும் சிதைக்க முயலும் பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்ட, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தெரிவித்திருக்கிறது.
இது குறித்து கட்சியின் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், "மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் விருப்பம். ஆனால், மதவாதத்தின் அடிப்படையிலான கும்பல் கொலைகள், அம்பேத்கர் விரும்பிய மதச்சார்பின்மைக்கு எதிரானது. ரிசர்வ் வங்கியை உருவாக்கியவர் அம்பேத்கர். ஆனால் ரிசர்வ் வங்கி, நீதித்துறை போன்ற சுயேச்சையான அமைப்புகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய தூண்களில் ஒன்று கூட்டாட்சி முறை. மோடி பிரதமரான பிறகு தனது உண்மையான ஆர்.எஸ்.எஸ் முகத்தை வெளிப்படுத்தினார். கூட்டாட்சித் தத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் சிதைத்து வருகிறார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் துரோகம் இழைத்து அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மட்டுமே காக்கும் அரசாகவே உள்ளது என்பதை நாம் கடந்த 10 ஆண்டுகால அனுபவம் நமக்கு உணர்த்தியிருகிறது.
சான்றாக, கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் தோல்வி, மக்களின் வாழ்க்கையில் கடும் நெருக்கடி, பொருளாதார தேக்கம், அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் கொள்ளை லாபம், வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு சிக்கல்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம்.
14வது நிதி ஆணையம், மொத்த வரிவருவாயில் 42 விழுக்காடு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதுவே குறைவு தான். ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இதனை 32 விழுக்காடாக குறைத்தது. அதில் முக்கியமானது "செஸ் வரி" ஆகும்.
ஒன்றிய அரசு செயல்படுத்தும் அனைத்து வரிகளையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால், செஸ் வரி வருவாய் பகிர்வை பறித்தது மோடி அரசு. அதேபோன்று, ஜி.எஸ்.டி. வரி கட்டமைக்கப்பட்ட விதம் மாநில சுயாட்சிக்கு மிகப்பெரிய அடியாகும்.
இவை தவிர, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இசுலாமிய பெருமக்கள் அடக்கு முறைகளாலும், ஒடுக்கு முறைகளாலும் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, காஷ்மீர் சிறப்பு உரிமைப் பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
இப்படி நாட்டின் அரசியலமைப்பு, பன்முகத்தன்மையை சிதைக்க முயன்றதோடு, மக்கள் மீது பல்வேறு அடக்கு முறைகளையும், ஒடுக்கு முறைகளையும் பாசிக கும்பல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இப்போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர துடிக்கிறது மோடி கும்பல். இந்த சர்வாதிகார கும்பல் மீண்டும் ஆட்சி பீடத்தில் அரியணை ஏறினால், இந்தியாவில் ஜனநாயக முறையே இருக்காது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதிபர் ஆட்சியை அமல்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக நாடு எனும் அரசியல் சட்டத்தைக் காக்கவும், நாட்டு மக்களின் வாழ்வையும், வாழ்வுரிமைகளை பாதுகாக்கவும், பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்ட, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications