ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - வேல்முருகன் அறிவிப்பு
சென்னை : நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நாளை காலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போரட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபுறம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளும், வருணாசிரமக் கட்டுமானத்தை அமல்படுத்தும் பாசிச நடவடிக்கைகளும் தான் அரங்கேறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை எல்லாம்.
இதனால், நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு ஒருபோதும் ரத்து செய்யாது. பாஜகவின் ஊதுகுழலாக இருக்கும் ஆளுநரும் சரி, நீதித் துறையும் சரி, வழக்கை காயப் போட்டு, மாணவர்களின் கழுத்தை கச்சிதமாக அறுக்கும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
அதன் தொடர்ச்சி தான், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது. நீட் விலக்கு கோரும் தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர், அத்தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர். அவரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. அதனை தான் அரசியலமைப்பு சட்டமும் கூறுகிறது. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் சுட்டிக்காட்டுகிறது.

நீட் தேர்வு
உதாரணமாக, கடந்த 1999 -ல், நளினியின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி, கலைஞர் தலைமையிலான அரசு முடிவு செய்து, அப்போதைய ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீது யாரிடம் கருத்து கேட்காத ஆளுநர், அம்மனுவை திருப்பி அனுப்பினார். அதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞர் தலைமையிலான அரசு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது, மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர், அமைச்சரவையின் முடிவை செயல்படுத்தும் பொறுப்பு தான் ஆளுநருக்கு உள்ளது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதே போன்று தான், பேரறிவாளன் வழக்கிலும் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவு நீட் தேர்வுக்கும் பொருந்தும்.

தமிழக சட்டமன்றம்
இந்த கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் கருத்தில் கொள்ளாத அல்லது தெரியாத ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்துக்குரியது. ஆளுநரின் இத்தகையை நடவடிக்கை, அவரின் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா என்பது கூட தெரியவில்லை.
Recommended Video

முற்றுகை போராட்டம்
எனவே, நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுருக்கே மீண்டும் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. இதனிடையே, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி, 05.02.2022 அன்று, காலை 11.00 மணியளவில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் வேல்முருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications