கரண்ட் வயர் கட் ஆகியிருக்கா.. உடனே கால் பண்ணுங்க.. ரஜினி படம் போட்டு ட்வீட் செய்த மின்வாரியம்
சென்னை: மழை காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் மின்சார வாரியத்திற்கு உடனே போன் செய்து தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி பட ஸ்டில் உடன் மின்சார வாரியம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.
மழை காலம் வந்தாலே கரண்ட் பிரச்சினை வந்து விடும். அதிக அளவில் விபத்துகள் மின்சாரத்தினாலும் ஏற்படும். மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மின்சார கசிவு ஏற்பட்டால் உயிரிழப்புகளும் ஏற்படும். எனவே பருவமழை தொடங்கும் முன்னதாகவே பொதுமக்களுக்கு டான்ஜெட்கோ பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு முன்பு, மின்வாரியப் பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதன் அருகில் செல்லக் கூடாது. உடனே அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்திருந்தது.

மழை காலத்தில் செய்யாதீங்க
ட்ரான்ஸ்ஃபார்மர், மின்கம்பம், மின் விநியோகப் பெட்டி, டிரான்ஸ்ஃபார்மர் வைக்கப்பட்டிருக்கும் கம்பம் அருகிலுள்ள 'ஸ்டே ஒயர்' ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. மின்கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின்கம்பம், மின்கம்பி, ட்ரான்ஸ்ஃபார்மரை தாங்கியுள்ள கம்பத்தில் துணிகளைக் காயவைக்கக் கூடாது.

இந்த விசயத்தை செய்யவே கூடாது
மின் விநியோக சாதனங்களுக்கு அருகில் யாரும் செல்லக் கூடாது. மழைத் தண்ணீர் புகுந்த வீடுகளில் ஈரம் முழுவதுமாக வடிந்த பின்னர்தான் மின் சாதனங்களை இயக்க வேண்டும். ஈரக் கைகளால் ஸ்விட்சை தொடக் கூடாது. மின்கம்பம் சேதமடைந்திருந்தாலோ, மின்கம்பி தாழ்வாகத் தொங்கினாலோ, உடனே அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவித்திருந்தனர்.

மின்கம்பங்கள் மாற்றியமைப்பு
மழை காலம் தொடங்கும் முன்னதாகவே நடப்பாண்டு மாற்றப்பட்ட மின்கம்பங்கள் - 39,616; சீர்படுத்தப்பட்ட மின் கம்பங்கள் - 31,197; புதிதாக இடைச்செருகல் செய்யப்பட்ட மின்கம்பங்கள் - 28,080; மாற்றப்பட்ட பலவீனமான இன்சுலேட்டர்கள் - 1,08,947; புதுப்பிக்கப்பட்ட மின்கம்ப தாங்கு கம்பிகள் - 40,685; 1,759 கிலோமீட்டருக்கு பழைய மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் மின் மாற்றிகள்
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தரைமட்டத்தில் இருந்து உயரம் உயர்த்தப்பட்ட மின் பெட்டிகள் - 2,692; சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தரைமட்டத்தில் இருந்து உயரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகள் - 16; நீர் பிடிப்பு பகுதிகளில் இடம் மாற்றப்பட்ட விநியோக மின் மாற்றிகள் - 62 ஆகும். இது தவிர தயார் நிலையில் 14,442 மின் மாற்றிகள்; 1,50,932 மின் கம்பங்கள்; 12,780 கி.மீ., க்கான மின் கடத்திகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டான்ஜெட்கோ ட்வீட்
இதனிடையே பருமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து மின்சார வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தால் உடனே அருகில் உள்ள மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவும் என பதிவிட்டுள்ளது. இதனையடுத்து பலரும் தங்களின் புகார்களை டான்ஜெட்கோவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு மின்வாரிய அதிகாரிகளும் உடனே பதில் அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications