தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக போலீஸ் மனு!
சென்னை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், இந்த சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை
வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார். மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் மாணவியின் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி
மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். செல்போன், சிடி உள்ளிட்ட பொருட்களை ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும் என்று மாணவி குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
தனது மகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று மாணவியின் தந்தை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்னர் இன்று மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். மாணவி தற்கொலை விவகாரத்தில் தனது தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என மனு அளித்துள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு தடை கேட்ட தமிழக அரசு
இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் சார்பில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications