டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரியர்ஸுடன் வரும் ஊதிய உயர்வு
சென்னை: மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகையுடன் கூடி, 2 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்து 787 கடைகள் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் 6 ஆயிரத்து 567 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 636 விற்பனையாளர்கள் மற்றும் 2 ஆயிரத்து 426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் ஊதிய ஊயர்வு வழங்கப்படும் என்று துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ. 64.08 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த சம்பள உயர்வுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்த வகையில், அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வாக ஆயிரம் ரூபாயும், ஊழியரின் வேலை, நடவடிக்கையைப் பொறுத்து ஊக்கத் தொகையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு அவர்கள் பெற்று வரும் தொகுப்பூதியத்துடன் மாதம்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்க அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது அறிவிப்பில், 'டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications