சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்.. குமரகுருபரன் ஐஏஎஸ் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் வகையில் மதுக் கடைகள் நான்கு நாட்கள் மூடப்படுவதாக சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்பட உள்ளது.
தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து கடந்த மார்ச்15-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையர், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக இருக்கிறது.

இந்த தேர்தலில் ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், விஜய்யின் தவெக தனியாகவும், சீமானின் நாம் தமிழர் தனியாகவும், ராமதாஸ், சசிகலா ஆகியோர் இணைந்து ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கிறார்கள். இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலை முறையாக நடத்த தேவையான நடவடிக்கைகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில், சென்னை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கூறியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்) மற்றும் பார்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் ஆகியவை ஏப்ரல் 21, 22, 23 (வாக்குப்பதிவு நாள்), மே 04 (வாக்கு எண்ணிக்கை நாள்) ஆகிய 4 நாட்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குமரகுருபரன் ஐஏஎஸ் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-இன் படி, உரிமம் பெற்று இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் FL-2 முதல் FL-11 வரை (FL-6 தவிர) உரிமம் பெற்ற கடைகள் அனைத்தும் ஏப்ரல் 21 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 04 (திங்கட்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications