டாஸ்மாக் கடைகள் ஜாஸ்தியாயிடுமோ? இப்படி இறங்கிட்டாங்களே? அதைவிடுங்க..மதுக்கடைகள் இந்த நாளில் விடுமுறை
சென்னை: டாஸ்மாக்கை திறக்க கோரி தருமபுரியில் பெண்களே ஒன்று சேர்ந்து கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, வருகிற 15ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே கலைந்து, காற்றோடு கரைந்தும் போய் கொண்டிருக்கிறது.. அதேசமயம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழக அரசுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டி கொண்டிருக்கிறது.. அரசின் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக தெரிகிறது.

மாநிலத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வரும்நிலையில், இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது.
அரசுக்கு வருவாய்: தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது
இதனிடையே மரக்காணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பிறகு, டாஸ்மாக் கடைகளை முழுமையாக இழுத்து மூட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு நேரங்களில், பெண்களே ஒன்றுகூடி போராட்டத்தை தமிழகத்தில் நடத்தியிருக்கிறார்கள்.. ஆனால், நேற்றைய தினம் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.
டாஸ்மாக் கடைகள்: தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது... இதில், தர்மபுரியிலுள்ள நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தங்கள் பகுதியில் இருந்து 20 கி.மீ சென்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டியிருக்கிறது, எனவே தங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும்.. சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபானத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதால், தாங்கள் உழைத்து சம்பாதித்த பணம் அதிகம் செலவழிந்து விடுவதாகவும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட பிற போதையை மக்கள் நாடாத வகையில் தங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்" என்று மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் (Tasmac) நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.
விடுமுறை அறிவிப்பு: அந்த அறிவிப்பில், இந்திய சுதந்திர தினம் சிறப்பிக்கப்படும் ஆகஸ்ட் 15 அன்று, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அரசு உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் பார் நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் அதிகாரிகள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மதுபானக்கடைகளை கண்காணித்து, உத்தரவை மீறி செயல்படும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகியதில் இருந்தே, டாஸ்மாக்குகளில் குடிமகன்களின் நெரிசல் அதிகரித்துள்ளது.. இன்றும், நாளையும், டாஸ்மாக்குகளில் குடிமகன்கள் "இருப்புகளை" வாங்கி கொள்வார்கள் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications