’சார் கட்டிங்’ டாஸ்மாக் வாசலில் காத்திருக்க வேண்டாம்! குடிமகன்களுக்கு குஷியான செய்தி! வருகிறது 90 ML
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் குவாட்டர், ஆஃப், புல் அளவுகளில் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், தீபாவளி முதல் 90 மிலி என்ற அளவில் கட்டிங் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். கொரோனா காலத்தில் கடைகள் மூடப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் கூட அதிக அளவு மது விற்பனை இருந்தது. குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களில் சொல்லவே வேண்டாம்
இவ்வாறாக தமிழக அரசுக்கு வருவாய் தரும் முக்கிய துறையாக டாஸ்மாக் இருக்கிறது. ஆனாலும் நீண்ட காலமாகவே குடிமகன்களுக்கு ஒரு குறை இருக்கிறது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டர், ஆப், ஃபுல் என்ற வகைகளிலேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி ஆகிய அளவுகளிலேயே மதுபானங்கள் விற்கப்படுகிறது. பீர் வகைகளும் 360 மில்லி, 760 மில்லி என்ற வகையிலேயே விற்பனையாகிறது.
தற்போது குறைந்த விலையாக 140 ரூபாய்க்கு விற்கப்படும் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் என வைத்து 150 ரூபாய்க்கும், 170 ரூபாய்க்கு விற்கப்படும் இரண்டாம் தர மதுபானங்கள் 180க்கும் விற்பனையாகிறது. இதேபோல உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் அதிகபட்சமாக குவாட்டருக்கு 360 வரை விற்பனையாகிறது. இதனால் குறைந்த விலையில் மதுபானங்கள் வாங்க முடியாத குடிமகன்களும் கட்டிங் எனப்படும் 90 மில்லி மதுபானங்களும் கிடைக்காமல் குடிமகன்கள் அவதி அடைகின்றனர்.
இதனால் டாஸ்மாக் பார்களிலும் கள்ளச் சந்தைகளிலும் கட்டிங் எனப்படும் 90 மில்லி மதுபானங்களை வாங்கி குடிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு சட்டவிரோத மது விற்பனையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இந்த நிலையில் குடிமகன்களின் நீண்ட கால குறையை தீர்க்கும் வகையில் டாஸ்மாக் மது கடைகளில் 90 மில்லி கொண்ட கட்டிங் மது பாட்டில்களை விற்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மில்லி மது வகைகளை விற்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டபோது தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டெட்ரா பேக்குகளுக்கு பதிலாக பாட்டில்களிலேயே 90 மில்லி கட்டிங் மதுபானங்களை விற்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து இருக்கிறது.
தீபாவளி பரிசாக குடிமகன்களுக்கு இந்த விற்பனை தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது தற்போது மதுபானங்கள் 140 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் 90 மில்லி மது பாட்டில்கள் 80 ரூபாய்க்கு விற்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மது உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் அதிக பணம் இல்லாதவர்கள் 'சார் கட்டிங்.. சார் கட்டிங்' என வேறு யாராவது ஒருவரை எதிர்பார்த்து காத்திருப்பதை பார்த்திருக்க முடியும்..
இனி அந்த பிரச்சனை இருக்காது என்கின்றனர் டாஸ்மாக் விற்பனையாளர்கள். தமிழகத்தில் தற்போது முதல் முதலாக 90 மில்லி மது பாட்டில்கள் விற்பனையாக இருக்கும் நிலையில், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்கள் ஏற்கனவே விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே 90 மிலி கட்டிங் விற்பதன் மூலம் குடிமகன்களின் ஆசை நிறைவேறுவதோடு, தமிழக அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications