"பீர் டூ ஒயின் வரை".. தேர்தலால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு! எத்தனை பாட்டில் வாங்கலாம்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒரு நபர் அதிகபட்சமாக எவ்வளவு மதுபானம் வாங்க முடியும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணம், பரிசு பொருட்களை உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விடுவார்கள் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் ஒருவர் எவ்வளவு வாங்கலாம்?
அந்த வகையில் தற்போது டாஸ்மாக்கில் குவார்ட்டர், ஹாப், ஃபுல் வகை மதுபானம், பீர் ஒயின் என அனைத்து வகை மதுபானம் வாங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநபர் அதிகபட்சமாக 4.5 லிட்டர் ஹாட்வகை மதுபானம் வாங்கலாம்.
அதேபோல், 7.8 லிட்டர் பீர், 9 லிட்டர் ஒயின் மட்டுமே வாங்க முடியும். அதன்படி பார்த்தால் ஒருவர் ஆறு ஃபுல் (ஒன்று 750 மிலி) அல்லது 12 ஹாஃப் (375 மிலி) அல்லது 24 குவார்ட்டர் (180மிலி) பாட்டில்களை வாங்கலாம். அதேபோல் பீர் என்றால் 12 பாட்டில்கள் வரையும் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீறினால் பாயும் நடவடிக்கை
இந்த வரம்புகளை டாஸ்மாக் கடைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்ட மேலாளர்களும், அனைத்து சூப்பர்வைசர்கள் மற்றும் டாஸ்மாக் மது விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். மேலும் விற்பனை குறித்த விவரங்களை கணினிகள் வழியாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகளை மீறினால் விசாரணை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டோக்கனுக்கு மதுபானம் கிடையாது
முன்னதாக அரசியல் கட்சியினர் வழங்கும் டோக்கன் மற்றும் கூப்பன்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய கூடாது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் கடந்த ஆண்டு இதே தேதியில் இருந்த மதுபான இருப்பை விட 50 சதவீதத்துக்கு மேல் மதுபானம் இருப்பு வைக்க கூடாது.
அதேபோல் இந்த மாதத்தில் மதுபான விற்பனையை 30 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 சதவீதத்துக்கு மேல் விற்கப்படும் மதுபானம் மொத்த விற்பனையாகவும், 50 சதவீதத்துக்கு மேல் மதுபானம் இருப்பு வைத்தால் பதுக்கலாக எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விற்பனையாளர்கள் புலம்பலால் விளக்கம்
அதோடு அளவுக்கு அதிகமாகவும், மொத்தமாகவும் எந்த தனிநபர்களுக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து இருந்தார். இதுபற்றி டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், மொத்தமாக மதுபானம் விற்பனை செய்ய வேண்டாம் என்று சொல்கின்றனர்.
ஆனால் மொத்த விற்பனைக்கான அளவு பற்றிய தெளிவை கொடுக்கவில்லை என்று கூறினர். இந்நிலையில் தான் தற்போது டாஸ்மாக் நிறுவனம் ஒருவருக்கு எந்த வகை மதுபானம் எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும்? என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications