என்னங்க சொல்றீங்க.. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை குறைஞ்சு இருக்கா! காரணம் என்ன தெரியுமா
சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக்கின் விற்பனை குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுக்க மதுபானங்கள் மாநில அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் டாஸ்மாக் மூலமே விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டுத் தரும் துறைகளில் இதுவும் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது.

விற்பனை
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் சமயங்களில் முந்தைய ஆண்டுகளை முறியடிக்கும் வகையில் டாஸ்மாக் மது விற்பனை இருப்பது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தனியார் நிறுவனங்களைப் போல விற்பனையை அதிகரிக்க ஆலோசனைக் கூட்டங்கள் எல்லாம் கூட நடந்துள்ளன. இருப்பினும், இதற்கு சமூக ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, இதுபோன்ற கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன.

டாஸ்மாக்
இதற்கிடையே இப்போது மாநிலத்தில் டாஸ்மாக் விற்பனை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு டாஸ்மாக்கில் விற்பனையாகும் மதுபானங்களின் விலையை உயர்த்தின. அதன்படி பிரீமியம் மது வகைகளாகக் கருதப்படும் IMFL எனப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் இந்தியத் தயாரிப்புகளின் விலை 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன.

விலை
அதேபோல நடுத்தர மது வகைகளில் 20 முதல் 60 ரூபாய் வரையும் குறைந்த விலை மது விலை 10 முதல் 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வு காரணமாக நடுத்தர மது வகைகளை அருந்தி வந்தவர்களும் குறைந்த விலை மதுவுக்கு மாறி உள்ளனர். குறைந்த விலை மதுவில் கிடைக்கும் லாபம் குறைவு. இதன் காரணமாகவே விற்பனை மாநிலத்தில் குறைந்துள்ளது. சுமார் 4-6% வரை விற்பனை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மது வகைகள்
ப்ரீமியம் ரக மதுக்களில் தான் லாபம் அதிகமாக இருக்கும். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த ப்ரீமியம் ரக மதுபானங்களையே சப்ளே செய்யும். பொதுவாக சப்ளை பட்டியலில் இந்த ரேஞ்ச் மதுபானங்கள் 60%ஆக இருக்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. கம்மி லாபம் தரும் குறைந்த விலை மதுபானங்களே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வருவாய் குறைந்துள்ளது.

காரணங்கள்
அதேபோல கோடைக் காலம் முடிந்துள்ளதும் டாஸ்மாக் விற்பனை குறைந்ததற்கு மற்றொரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே விற்பனையை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுபோன்ற கூட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிகரிப்பதே நோக்கம்
இதையடுத்து விற்பனை குறைந்ததற்கான காரணங்களை விளக்கவும் குறைகளைக் கேட்டறியவுமே அந்த கூட்டம் நடைபெற்றதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பதாகவே செய்திகள் வெளியாகும் நிலையில், விற்பனை குறைந்துள்ள செய்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications