டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை.. தமிழகம் முழுவதும் மது விற்பனை கிடையாது!
சென்னை: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள், மதுபான பார்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையையொட்டிய நாளில் மதுபானக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. இதன் காரணமாக டாஸ்மாக் மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.110 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கு அதிகமாகவும் மது விற்பனை நடைபெறுகிறது.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் விடுமுறை விடப்படும். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் பார்கள், மதுபான விடுதிகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் எந்தக் கடையும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி, தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications