டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் பணம் வசூலித்தால் இனி டிஸ்மிஸ்? தமிழகத்தில் வரப்போகும் புதிய திட்டம்
சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் இனி கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் பிடிபட்டால், அவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்படும் என்றும், ஏற்கனவே முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டால், 'டிஸ்மிஸ்' செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று பலமுறை நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனால், இன்னும் பல ஊழியர்கள் திருந்தவில்லை.. தமிழ்நாட்டில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வசூலிப்பது தொடர்கிறது. குறிப்பாக சென்னையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்காத கடைகளை தேடித்தான் பார்க்க வேண்டிய நிலை இருக்கும் என்கிறார்கள் குடிமகன்கள்.

ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயம் செய்த விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக, 10 ரூபாய்க்கு மேல் வசூலிப்பதன் பின்னணியில் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் வரை, 'கமிஷன்' செல்வதாக எதிரக்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஏன் சில டாஸ்மாக் ஊழியர்கள் கூட சில வீடியோக்களில் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தீவிரமாக முன்வைத்தன. அப்போது பதில் அளித்த செந்தில் பாலாஜி, எந்த கடை என்று குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது என்றார். மேலும் டாஸ்மாக்கில் கூடுதல் விலை வைத்து விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதன் பின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக முத்துச்சாமி பொறுப்பேற்ற பின்னரும் டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகமாக வாங்குவது தொடர்கதையாக உள்ளது. தொடர்ந்து குடிமகன்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
இதனிடையே டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க மதுக்களின் விலை பட்டியலை தெரியும் வகையில் வைக்க வேண்டும் எனறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் டாஸ்மாக் முறைகேட்டை தடுக்க, கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்களுக்கு அபராதம், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் வாயிலாக, முறைகேட்டை தடுக்க முடியவில்லை. இதையடுத்து, புகாருக்கு ஆளாகும் ஊழியர்களை 'சஸ்பெண்ட்' செய்யுமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு, கடந்த ஜூலை 18ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.
எனினும் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள கடைகளில், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்கிறது. இதையடுத்து இனி கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் பிடிபட்டால், அவர்களின் பின்னணி குறித்து விசாரிப்படும் என்றும், ஏற்கனவே முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டால், 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. டிஸ்மிஸ் செய்தால் மட்டுமே கூடுதலாக பணம் வசூலிப்பதை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று டாஸ்மாக் நிர்வாகமும் கருதுகிறதாம்.












Click it and Unblock the Notifications