அரசு டாஸ்மாக் கடைகளில் "மாற்றம்".. தீபாவளிக்கு காலையிலேயே கிறங்கி விழுந்த சென்னை.. மது விற்பனை ஜோர்
சென்னை: தீபாவளிக்கு மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், இன்றைய தீபாவளி பண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறதாம்.
தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.. இதில், ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் ஆண்டு முழுவதும் அரசுக்கு கிடைத்து வருகிறது.. அதற்கேற்றவாறு, தினமும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

சிறப்பு விற்பனை: இதுவே பண்டிகைகள், சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் டபுள் மடங்காக பெருகிவிடுகிறது.. அதிலும் தீபாவளியின்போது, டாஸ்மாக் வருமானம் 3 மடங்காக பெருகிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.கடந்த வருட தீபாவளியின்போது, 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த தீபாவளிக்கும் ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே, தினமும் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 3,500 மதுக்கடைகளிலும் கூடுதல் விற்பனை கவுண்ட்டர்களை அமைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. 30, 31-ந்தேதி, நவம்பர் 1, 2, 3 ஆகிய 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், கூடுதல் சரக்குகளின் இருப்புகளும் வைக்கப்பட்டன.ஆனால், தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
பாமக நிறுவனர்: குறிப்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்லும்போது, "திமுக ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை. கடந்த ஆண்டைவிட, 20 சதவீதம் கூடுதலாக மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்க, வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னும் - பின்னும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இதேபோல், 1,500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
அதேபோல, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுபோது, "தீபாவளியை மையமாக வைத்து சரவெடிக்கு மீதான தடையை நீக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை குடிகார பண்டிகையாக மாற்றிவிட்டனர். அரசு டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு டார்கெட் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு மது விற்பனையை அதிகரிக்கிறது. தீபாவளி மற்றும் அதற்கு முன், பின் ஆகிய 3 நாட்கள் அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும்" என்றார்.
எதிர்க்கட்சிகள்: இதே கோரிக்கையை தமாகா தலைவர் ஜிகே வாசனும் விடுத்திருந்தார்.. ஆனால், மதுவிற்பனை தமிழகத்தில் நேற்று முதல் களைகட்ட துவங்கவிட்டது.. தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், கடந்த ஒரு வார காலமாகவே, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஏனென்றால், டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கம். ஆனால், தீபாவளி முன்னிட்டு விதியை மீறி மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன..
டார்கெட் எட்டிவிடுமா: அந்தவகையில், சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்து வருகிறது. அதுவும், காலையிலேயே டாஸ்மாக் கடை பார் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். எப்படியும் நிர்ணயிக்கப்பட்ட டார்கெட்டை டாஸ்மாக் எட்டிவிடும் என்றும் கணித்து சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications