Teachers Protest: சமவேலைக்கு சம ஊதியம்.. இடைநிலை ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் கோரிக்கை.. போராட்டம் முடிவுக்கு வருமா?
சென்னை: ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், விரைவில் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனை சார்ந்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதி 311 ஆக சம வேலைக்கு சம ஊதியம் தரப்படும் என்று, திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்து இருந்தது. இந்த வாக்குறுதியானது தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என உடனே இந்த வாக்குறுதியை அமல்படுத்த கோரி இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் இடை நிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து போராட்டம் செய்வது பின்னர் போலீசாரால் அப்புறப்படுத்துவதும் என அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இது தொடர்பாக பதில் அளித்துள்ளார். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
அன்பில் மகேஷ் கோரிக்கை
அன்பில் மகேஷ் கூறியதாவது:- பணிக்கு செல்லாமல் உள்ள 5,781 ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப கோரிக்கை வைக்கிறோம். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும். விரைவில் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனை சார்ந்த முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒரே வேலை, ஒரே தகுதி
2009 ஆம் ஆண்டு மே 31 வரை நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 8,370 -ம் அதே ஆண்டு ஜூன் 1 நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை சம்பளம் 3 ஆயிரத்திற்கும் மேல் வேறுபடுகிறது.
ஒரே வேலை, ஒரே தகுதி இருந்தும் சம்பள வித்தியாசம் 16 ஆயிரம் வரை ஏற்பட்டுள்ளது. எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடுவதாக இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தெரிவித்து வருகிறார்கள். அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது ஆசிரியர்களுக்கு வைத்துள்ள கோரிக்கையின் காரணமாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications