மைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு
Recommended Video
சென்னை: சென்னையில் இருந்து, மைசூர் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயணித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் நகரத்துக்கு இன்று காலை ஒரு குட்டி விமானம் கிளம்பியது. அதில் மொத்தம் 42 பயணிகள் இருந்தனர். கிளம்பத் தயாரான நேரத்தில் விமானத்தின் இஞ்சின் பகுதியில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, விமானத்தை கிளப்பாமல் நிறுத்தியுளளார் பைலட். உடனடியாக இன்ஜினியர்களுக்கு தகவல் கொடுத்தார். இன்ஜினியர்கள் குழு, விரைந்து வந்து இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கியது. இதன் பிறகு அந்த விமானம் கிளம்பி சென்றுள்ளது.
சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த், மைசூருக்கு பயணித்துள்ளார். விமானம் கிளம்புவதற்கு தாமதமானதால், அவருடன் பயணிக்கவிருந்த பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு உள்ளனர். இதையடுத்து அனைவருடனும் இணைந்து குரூப் புகைப்படம் ரஜினிகாந்த எடுத்துக் கொண்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
துக்ளக் ஆண்டு விழாவில், 1971ல் பெரியார் நடத்திய பேரணி தொடர்பாக சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, ரஜினிகாந்த், தான், கூறியதில் தவறு இல்லை என்றும், எனவே வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டார்.
இதனால், கடந்த இரு வாரங்களாக செய்திகளில் தொடர்ந்த அடிபட்டு கொண்டிருந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில், அவர் திடீரென மைசூர் கிளம்பிச் சென்றுள்ளார். ஓய்வெடுக்க சென்றாரா? அல்லது திரைப்பட சூட்டிங் தொடர்பான ஆலோசனைகளில் பங்கேற்க சென்றாரா? என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications