செலவு எவ்வளவு குறையுது பாருங்க.. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு புதுவை ஆளுநர் தமிழிசை சப்போர்ட்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவாக தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே அவ்வப்போது பேசி வருகிறது. சொல்லப்போனால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது புதிது கிடையாது. கடந்த 1967 ஆம் ஆண்டு வரை இந்த முறையே பின்பற்றப்பட்டு வந்தது. அதன்பிறகு தான் தனித்தனியாக தேர்தல் நடைபெறும் முறை தொடங்கியது. இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பேச்சு பலமாக அடிபட தொடங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் எது குறித்து விவாதிக்கப்படும், எந்த மசோதா நிறைவேற்றப்படும் என்பது பற்றிய எந்த ஒரு அஜெண்டாவும் சொல்லப்படவில்லை. இதனால், பல்வேறு யூகங்களும் கொடிகட்டி பறக்கின்றன.
இதற்கு மத்தியில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்தக் குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை மேற்கொள்ளும். அதன்பிறகு இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவரலாமா என்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தெரிகிறது.
அதிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர அரசியல் அமைப்பிலும் திருத்தங்கள் கொண்டு வர வேண்டியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும் போது செலவு குறைவதாகவும் இதனால் மக்களுக்கு நன்மையே இருக்கும் என்று தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும் போது செலவு எவ்வளவு குறைகிறது என்று பாருங்கள். தேர்தல் என்பது மக்களுக்காக... அரசியல்வாதிகளுக்காக அல்ல... எவ்வளவு செலவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த மாநிலங்களில் உள்ள நிர்வாகம் முடங்கி போகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு பிரசாரம் செய்ய செல்லும் போது அவர்களின் மாநிலத்தில் உள்ள நிர்வாகம் முடங்கி போய்விடுகிறது. ஒரே தேர்தல், ஒரே செலவு, ஒரே நேரம் என்றால், மக்களின் வரிப்பணம் வீணாகாமல் தடுப்பதற்கும் அரசியல் பிறழ்வு காரணமாக பிரச்சினை வராமல் இருப்பதற்கும் ஒரே தேர்தல் ஒரே நேரத்தில் வருவது மிகவும் நல்லது. மக்களுக்கான ஒரு திட்டம் இது" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications