கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர் மயில்சாமி.. திரையுலகத்திற்கு பேரிழப்பு.. தமிழிசை இரங்கல்!
நடிகர் மயில்சாமி உயிரிழந்தது திரையுலகத்திற்கு பேரிழப்பு என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.
சென்னை: நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், கட்சி எல்லைகளை கடந்து நட்பு பாராட்டியவர் மயில்சாமி என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் நகைச்சுவை நடிகர் மயில்சாமி. காமெடி மட்டுமல்லாமல் மிமிக்ரி ஆர்டிஸ்ட், நிகழ்ச்சி தொகுப்பாளர், விவாதங்களில் பங்கேற்பவர், குணசித்திர நடிகர் பன்முகங்களை திரையில் வெளிக்காட்டியவர்.
அதேபோல் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட மயில்சாமி தீவிர சிவபக்தராவார். சிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருந்து சிவன்கோயிலுக்கு சென்றுவிட்டுதான் உணவு அருந்துவார்.

மயில்சாமி உயிரிழப்பு
இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் சிவன்கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் மயில்சாமி சென்றிருந்தார், அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதனால் திரையுலகமே சோகத்தில் உள்ளது.

கட்சியை கடந்த நட்பு பாராட்டியவர்
உயிரிழந்த மயில்சாமிக்கு சினிமா பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மயில்சாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர். விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.

சமூக அக்கறை
மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்.முருகன் இரங்கல்
அதேபோல் மத்திய இணையமைச்சர் எம்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தன்னை சுற்றியுள்ள பகுதிகளுக்கு,சமூக எண்ணத்தினால் பல சேவைகளை செய்து,தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்த அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி..! என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் மயில்சாமிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications