பொது அதிகார பத்திரம், வில்லங்க சான்றிதழ்.. 6 ஏக்கர் நிலம் ரூ.1.11 கோடி! சொத்தை எடுத்த தென்காசி நபர்
தென்காசி: நட்புக்கு முக்கியத்துவம் தந்து காளிதாஸை நம்பி நிலங்களை வாங்கி போட்டுள்ளார் ராமச்சந்திரன்.. ஏக்கர் கணக்கில் நிலம், வில்லங்க சான்றிதழ், பொது அதிகார பத்திரம் என அனைத்தையுமே தன்னுடைய நண்பனை நம்பி செய்துள்ளார்.. இறுதியில், ரூ.1.11 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் போலீஸுக்கு ஓடினார்.. காவல்துறையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன தெரியுமா?
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி... இவர் வெளிநாடு வாழ் இந்தியர் ஆவார்.. இவருக்கு செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவர் அறிமுகமானார்.. இந்த அறிமுகமானது நாளடைவில் நட்பாக மாறியது..

7 சென்ட் இடம்
கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் காளிதாஸ் மூலம் சில சொத்துகளை ராமச்சந்திரன் சுவாமி வாங்கியிருக்கிறார்.. அதேபோல, காளிதாஸ் தன்னுடைய வீட்டுக்கு பக்கத்திலுள்ள 7 சென்ட் இடத்தை தருவதாக சொல்லி, ராமச்சந்திரன் சுவாமியிடமிருந்து ரூ.10 லட்சம் வாங்கியிருக்கிறார்.. ஆனால், இதற்கு முறையாக பத்திரப்பதிவு தராமல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இதனிடையே, கடந்த 2010ல் பண்பொழியை சேர்ந்த நபரிடமிருந்து 33 லட்சத்துக்கு வாங்கிய 6.18 ஏக்கர் நிலத்தை ராமச்சந்திரன் சுவாமி விற்பனை செய்ய முயன்றுள்ளார்.. இதில் குறுக்கிட்ட காளிதாஸ், "அவசரப்பட வேண்டாம், 2 கோடி ரூபாய்க்கு மேல் நானே விற்று தருகிறேன்" என்று கூறினாராம்.
பொது அதிகார ஆவணம்
இதை நம்பிய ராமச்சந்திரன் சுவாமி, அந்த நிலத்துக்கு காளிதாஸ் பெயரில் பொது அதிகார ஆவணம் செய்து தந்துள்ளார்.. அத்துடன், பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதற்காக தனது வங்கி கணக்கை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் வாங்கி தந்திருக்கிறார்.. எனினும், இடம் இன்னும் விற்பனையாகவில்லை என்ற பதிலையே காளிதாஸ் சொல்லி வந்திருக்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டு ராமச் சந்திரன் சுவாமி நேரடியாகவே கிளம்பி ஊருக்கு வந்துள்ளார்.. தான் வாங்கிய அந்த நிலத்தை பார்ப்பதற்காகவும் சென்றிருக்கிறார்.. ஆனால், அந்த நிலத்தை வேறு சிலர் அனுபவித்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு, அந்த நிலத்தை ரூ.1.11 கோடிக்கு தாங்கள் வாங்கியிருக்கிறோம் என்று பதிலளித்துள்ளனர்.
வில்லங்க சான்றிதழ்
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன், வில்லங்க சான்றிதழை எடுத்து பார்த்திருக்கிறார்.. அப்போதுதான், தான் வழங்கிய பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி அந்த நிலத்தை காளிதாஸ் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அத்துடன், அந்த பணத்தை தன்னுடைய வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததும், நிலம் இன்னும் விற்பனையாகவில்லை என்று தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
அதிர்ச்சி சம்பவம்
இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளான ராமச்சந்திரன் சுவாமி, இதுகுறித்து காளிதாஸிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார்.. அப்போது காளிதாஸ், கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதனால் மேலும் நிலைகுலைந்த ராமச்சந்திரன் சுவாமி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்திடம் புகார் அளித்தார்.. இந்த புகாரின்பேரில் எஸ்.பி. உத்தரவிட்டதன் அடிப்படையில், குற்றப்பிரிவு போலீஸார் காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான், காளிதாஸ் செய்த நிலமோசடி அம்பலமானது.. இப்போது காளிதாஸ் ஜெயிலில் உள்ளார்.












Click it and Unblock the Notifications