தீவிரவாதி அபுபக்கர் சித்திகை தூக்கிய போலீஸ்..தமிழக பாஜக தலைவர்கள் தான் டார்கெட்? லேப்டாப்பில் ஆதாரம்
சென்னை: நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கை தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜக பிரமுகர்களை கொலை செய்ய திட்டம் தீட்டி இருப்பதும், அவரது லேப்டாப்பில் முக்கிய பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து தமிழ்நாடு பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பல சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதோடு பல முக்கிய சதி செயல்களுக்கு திட்டம் திட்டி கொடுத்த அபுபக்கர் சித்திக்கை பல ஆண்டுகளாக தேடி வந்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக அபுபக்கர் சித்திக் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா அருகே ராயச்சூட் பகுதியில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அபுபக்கர் சித்திக் கைது செய்யப்பட்ட போது ஆயுதங்கள் லேப்டாப் செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சித்திக்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அபுபக்கர் சித்திக்கை தமிழ்நாடு அழைத்து வந்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். அபூபக்கர் சித்திக் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை பழைய கமிஷனர் ஆபீஸ் உள்ளிட்ட ஐந்து இடங்களில் குண்டு வைத்தது மற்றும் அதன் தொடர்புடைய ஏழு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். ஆறு நாள் விசாரணையில் 2012 ஆம் ஆண்டு பாஜக மருத்துவ மாநில அணி செயலாளர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் அபூபக்கர் சித்திக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று அபுபக்கர் சித்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அது மட்டும் அல்லாமல் பாஜக மூத்த தலைவரான அத்வானி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரத யாத்திரை நடத்திய போது மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பாலத்தின் கீழ் வெடிகுண்டு வைத்தது, நாகை மாவட்ட இந்து முன்னணியின் தலைவரின் மனைவி வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி கொலை செய்தது, பாஜக முன்னாள் எம்எல்ஏ ஜெகதீரா பாண்டியன் வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருந்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது.
இதற்கிடையே மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அபூபக்கர் சித்திக் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தபோது தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தலைவர்கள் உள்ளிட்ட நான்கு பேரின் புகைப்படங்கள் அவர்கள் தொடர்பான தகவல்களும் இருந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் மேலும் சில தலைவர்களின் புகைப்படங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களை கொலை செய்ய அபூபக்கர் சித்திக் திட்டமிட்டு இருக்கலாம் எனவும், போலீசார் கைது செய்தால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்றுடன் அபூபக்கர் சித்திக் விசாரணை காவல் நிறைவடைய இருக்கும் நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். தேவைப்பட்டால் அவரை மீண்டும் விசாரிப்போம் என்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications