இன்று பத்திரப்பதிவு செய்யலாம்.. தைப்பூசத்தையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள் வழக்கம்போல் இன்றும் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 2025ம் ஆண்டுக்கான தைப்பூச விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் கடவுளாக உள்ள முருகனுக்கு இன்று உகந்த நாள். இதனால் முருகனின் அறுபடை வீடு உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தமிழகத்தை பொறுத்ததவரை தைப்பூச நாள் என்பது அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்காது. இருப்பினும் தைப்பூசம் நாட்களில், சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, பலரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர். இதனால் தைப்பூசத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை போனது.
இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என்று அறிவித்துள்ளது அதன்படி இன்று தைப்பூச நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் மாலை 6 வரை இயங்கும்.
இன்று ஆவணங்கள் பதிவு செய்வோரிடம் கூடுதல் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது. அதாவது விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவுச் சட்டத்தின் டேபிள் ஆஃப் பீஸ் இனம் 17(3)-ன் ஏ,பி,சி-ல் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது.
மேலும் ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழியில் தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த முறை சில இடங்களில் அரசு உத்தரவுகளை மீறி விடுமுறை தினத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது இதனால் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications