Thaipusam:பழனி சர்ச்சை-பக்தர்கள் இறங்க அனுமதிக்கப்பட்ட படிப்பாதையில் அடம்பிடித்து மலையேறிய அண்ணாமலை!
சென்னை: தைப்பூச திருநாளை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துச் சென்று வழிபாடு செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் யானைப்பாதையில் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில் அண்ணாமலையும் பாஜகவினரும் அடம்பிடித்து படிப்பாதை வழியாக மலையேறியதால் சர்ச்சை ஏற்பட்டது.
தைப்பூச திருநாளான நேற்று உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு நடத்தினர். முருகன் கோவில்களில் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு பகுதி முருகன் கோவில்களிலும் பாதயாத்திரையாக பக்தர்கள் காவடி, தீர்த்த கலச சுமந்து வந்து முருகனை வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று திரண்டு வந்து முருகப் பெருமானை வழிபட்டனர். பழனி மலை முருகனை தரிசனம் செய்வதற்காக சிறப்பான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, யானைப் பாதை வழியே மலையேறவும் படிப்பாதை வழியே கீழறங்கவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் எந்த சிரமும் இல்லாமல் முருகனை வழிபட்டு திரும்பினர். சுமார் 9 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்து முருகனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

படிப்பாதையில் சென்ற அண்ணாமலை
தைப்பூச நாளான நேற்று இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனிக்கு வருகை தந்தார். பழனி மலை அடிவாரத்தில் இருந்து மயில் காவடியை சுமந்தபடி திருஆவினன்குடிக்கு சென்று முதலில் வழிபட்டார். இதன் பின்னர் அருள்ஜோதி வீதி வழியாக காவடியை சுமந்தபடி பாதவிநாயகர் கோவில் படிப்பாதையை வந்தடைந்தார் அண்ணாமலை.
#WATCH | Tamil Nadu | On the occasion of Thaipusam, BJP State President K Annamalai visited the Palani Hill Temple by carrying a Kavadi, in Palani pic.twitter.com/VWME8SIPey
— ANI (@ANI) February 11, 2025
அப்போது படிப்பாதை வழியாக அண்ணாமலையும் அவருடன் வந்த பாஜக நிர்வாகிகளும் மலையேற முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், யானைப்பாதை வழியாக மட்டுமே மலையேற முடியும்; படிப்பாதை வழியாக இறங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என சுட்டிக்காட்டினர். இதனை பாஜகவினர் ஏற்க மறுத்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலுக்குப் பின்னரும் படிப்பாதை வழியாகவே அண்ணாமலையும் பாஜகவினரும் மலையேறினர். அப்போது படிப்பாதையின் ஒரு பகுதியில் பக்தர்கள் சிரமமின்றி இறங்கி வந்தனர். அண்ணாமலை படிப்பாதையில் காவடியுடன் மலையேறியதால் அவருடன் கை குலுக்க பலரும் முயற்சித்ததால் படிப்பாதையிலும் திடீர் நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications