வறுமை ஒழிந்து வளமும் -அமைதியும் -ஒற்றுமையும் செழிக்கட்டும்! தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!
சென்னை: வறுமை ஒழிந்து வளமும் அமைதியும் ஒற்றுமையும் செழிக்கட்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வன்முறை, பயங்கரவாதம்,மதவாதம், சாதியவாதம் ஆகியவற்றை மாய்க்கும் வகையில் செயல்படுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சாதிகள் -மொழிகள்
இந்திய திருநாடு தனது 75 ஆம் ஆண்டின் சுதந்திர தின விழாவை கொண்டாடுவது உலகம் எங்கும் வாழும் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள் , பண்பாடுகள், வேறுபட்ட நிலவியல் மற்றும் வானிலை என நம் நாடு ஒரு துணைக் கண்டமாக திகழ்கிறது.

அஹிம்சையாளர்கள்
அரசியல் குழப்பங்களும், பிரிவிணை எண்ணங்களும், ஊழலும், எத்தனையோ தடைகளை ஏற்படுத்தினாலும், அவற்றையெல்லாம் கடந்து ஒற்றுமையோடு நம் நாடு பயணிப்பதும்,முன்னேறுவதும் ஒரு சிறப்பாகும். இந்த சுதந்திரத்திற்காக பாடுபட்ட மன்னர்கள், தலைவர்கள், புரட்சியாளர்கள், அஹிம்சையாளர்கள் என பல தரப்பட்டவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்க்கும் நேரம் இது.

சமத்துவம் -சமூகநீதி
ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, நல்லிணக்கம் ஆகிய உயரிய லட்சியங்களே நமது முன்னோர்களின் நோக்கங்களாக இருந்தது.அவற்றை போற்றிப் பாதுகாத்திடும் உறுதி மொழியை சுதந்திரத்தின் பவள விழாவில் நாம் அனைவரும் முன்னெடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.காந்தியாரின் தத்துவங்களின் வழியாக எதிர்காலத்தை கட்டமைப்பதே நமது முதன்மை இலட்சியமாக இருத்தல் வேண்டும்.

மதவாதம்
வன்முறை, பயங்கரவாதம்,மதவாதம், சாதியவாதம் ஆகியவற்றை மாய்த்து; வறுமையை ஒழித்து ; வளமும், அமைதியும், ஒற்றுமையும் செழிக்கும் இந்தியாவை உருவாக்கும் வகையில் செயல்படுவோம் என்று முழங்குவோம். இந்திய சுதந்திரத்தின் பவள விழாவை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications