அக்.29-ம் தேதியை குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவித்துடுக... தமிமுன் அன்சாரி கோரிக்கை
சென்னை: ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் சுஜித்தின் உடல் மீட்கப்பட்ட நாளான அக்டோபர் 29-ம் தேதியை குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மாணவர் தினம், இளைஞர் தினம், ஆசிரியர் தினம் என விழிப்புணர்வை நோக்கமாக கொண்டு, பல்வேறு தினங்களை அரசு அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. இது போல அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்றவை உலகெங்கும் பின்பற்றப்படுகின்றன.
முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி தர்ணா... மதுரையில் பரபரப்பு
குழந்தை பாதுகாப்பு
இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு , அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒரு தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக எழுந்துள்ளது.
கோரிக்கை
குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிர் தியாகம் செய்த சோகம் மறையாத நிலையில், அக்குழந்தை மீட்கப்பட்ட அக்டோபர் 29 தேதியை , குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
முன்மாதிரி அறிவிப்பு
குழந்தைகளின் பாலியல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து தேவை,கல்வி வாய்ப்பு,, உயிர் வாழும் உரிமை ஆகியவை குறித்த விழிப்புணர்வை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் , இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
மறையாத சோகம்
மணப்பாறை சிறுவன் சுஜித் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பான விவாதம் கடந்த 6 நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அரசுக்கு முன்வைத்துள்ளார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.