பீஸ்ட் படம் மூலம் நடிகர் விஜய் தவறு செய்துவிட்டார்! முதல்வர் தலையிட வேண்டும்! தமிமுன் அன்சாரி பேச்சு
குவைத்: பீஸ்ட் படம் மூலம் நடிகர் விஜய் தவறு செய்துவிட்டார் என்றும் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பீஸ்ட் திரைப்படம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு பதற்றத்தை தணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குவைத்தில் நடைபெற்ற இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிமுன் அன்சாரி இதனைக் கூறினார். மேலும் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

வெறுப்பு விதைப்பு
தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள். இப்போது விஜய் இந்த தவறை பீஸ்ட் படம் மூலம் செய்துள்ளார். ஏற்கனவே அவரது துப்பாக்கி படம் மூலம் ஏற்பட்ட பிரச்சனையை அவர் சந்தித்துள்ளார். இப்பிரச்சனையை நாம் எவ்வாறு கையாண்டோம் என்பது கலைப்புலி.தாணு அவர்களுக்கு தெரியும்.

முதல்வர் தலையிட வேண்டும்
இப்போது சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் பதட்டத்தை தூண்டுவதாகவும், அமைதியை குலைப்பதாகவும் இருக்கிறது. திரும்ப திரும்ப ஒரு சமூகத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறார்கள். இது ஒரு கலை அல்லது சினிமா என ஒதுக்கிட முடியாது. அது காலம் முழுக்க மக்களுடன் தொடர்புள்ள ஊடகம். எனவே இதில் தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு பதட்டத்தை தணிக்க உதவ வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.

இழிவுப்படுத்தாதீர்
முன்பு MGR, சிவாஜி படங்களில் சகோதரத்துவம் ஒங்கும் வகையில் காட்சிகள் இருக்கும். ரஜினிகாந்த் அவர்களின் படங்களிலும் அத்தகைய காட்சிகள் இருந்தது. இப்போது சில நடிகர்கள் பணத்திற்காகவும், பரபரப்பான விளம்பரத்திற்காகவும் இப்படி ஒரு சமூகத்தை கேவலப்படுத்த நினைக்கிறார்கள். எந்த மதத்தையும், சாதியையும், இனத்தையும் இழிவுப்படுத்தி படம் எடுக்காதீர்கள்.

சினிமாத்துறைக்கு கேள்வி
இயேசுவை இழிவுப் படுத்தினாலும், ராமரை இழிவுபடுத்தினாலும், பெரியாரை இழிவு படுத்தினாலும் நாங்கள் எதிர்ப்போம். உங்களால் பாபர் மசூதி இடிப்பை படமாக எடுக்க முடியுமா? முள்ளிவாய்க்கால் பேரழிவை படமாக் எடுக்க முடியுமா? 2002 ல் நடந்த குஜராத் இனப்படுகொலைகளை படமாக எடுப்பீர்களா? உண்மைகளை வைத்து படம் எடுங்கள். வாழ்வியலை, வரலாற்றை படமாக்குங்கள். கற்பனைகளில் மக்களை மூழ்கடிப்பதை, வரலாற்றை திரிப்பதை, ஒரு சமூகத்தை சீண்டுவதை நிறுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications