''பாஜகவை காட்டி இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது''! அரசுக்கு சொல்றதை சொல்லிபுட்டேன்! -தமிமுன் அன்சாரி
சென்னை: பாஜகவை காரணம் காட்டி இனியும் இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது எனப் பேசி திமுக அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியிருக்கிறார் தமிமுன் அன்சாரி.
ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், நோய்வாய்ப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் யாரும் விடுதலை தாமதமாகி சிறையில் உயிரிழந்தால், அதனால் ஏற்படும் கொந்தளிப்புகளுக்கு தமிழக முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அன்சாரி கூறியிருக்கிறார்.

இதற்கு முன் இப்படி ஆவேசம் காட்டாத தமிமுன் அன்சாரி முதல்முறையாக சற்று கடுமையான வார்த்தை பிரயோகம் செய்திருக்கிறார்.
மேலும், அந்த நிகழ்வில் தமிமுன் அன்சாரி பேசியதாவது,
''தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று தான் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறோம். அதற்காக ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுகிறோம். பாஜகவை காட்டி எங்களை இனியும் ஏமாற்ற முடியாது. நாங்கள் ஒன்றும் இலவச வாக்காளர்கள் அல்ல.''
''1995 க்கு பிறகு முஸ்லிம் சமூகம் அரசியல் அறிவில் தெளிவுப்பெற்றிருக்கிறது. 2K தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். முன்பு போல ஒரு கட்சிக்கு அல்லது ஒரே கூட்டணிக்கு ஒட்டுப் போடுவதில்லை. அந்தந்த தேர்தலுக்கு ஏற்ற சூழலை கவனத்தில் கொண்டே ஓட்டுப் போடும் முடிவை எடுக்கிறார்கள்.''

''1995 க்கு பிந்தைய அவர்களது வாக்களிப்பை உன்னிப்பாக கவனித்தால் இது புரியும். பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இம்முறை திமுக தலைமையிலான கூட்டணிக்கு சிறுபான்மையினர் வாக்களித்தார்கள். ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையில் முஸ்லிம் கைதிகள் புறக்கணிக்கப்படுவது அவர்களிடம் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.''
''திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீவிர பரப்புரை செய்தவர்களே இவ்விஷயத்தில் முதல்வரையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்களின் முகநூலிலும், வாட்ஸ் அப் குழுமங்களில் கடும் விவாதங்கள் நடக்கிறது. முஸ்லிம் மஹல்லாக்களில் ( வசிப்பிடங்களில் ) இது பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை உளவுத்துறை அரசுக்கு உரிய வகையில் கொண்டு சேர்க்க வேண்டும்.''
''கட்சி சார்பற்ற பொதுமக்கள், ஜமாத்தார்கள், உலமாக்கள் ஆகியோர் இவ்விஷயத்தில் கோபமாக உள்ளனர். ஒரே கருத்தில் உள்ளனர்.இந்த அரசு நீடிக்க வேண்டும் என நாங்கள் மனதார விரும்புகிறோம். ஆனால் இவ்விஷயத்தில் நீதியை கோறுகிறோம். சிறைவாசிகள் விடுதலையில் இனியும் தாமதம் கூடாது.''
''161-வது பிரிவை பயன்படுத்தி சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் போடுங்கள். இந்த உரிமை மாநில அரசுக்கு உள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள அவர்கள் யாரும் விடுதலை தாமதமாகி சிறையில் உயிரிழந்தால், அதனால் ஏற்படும் கொந்தளிப்புகளுக்கு தமிழக முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.''












Click it and Unblock the Notifications