Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராம ராஜ்ஜியம் நான் அறியேன்.. திராவிட மாடல் ஆட்சி வளமானது.. தங்கம் சொன்ன உடன் முதல்வர் பூரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.. ராம ராஜ்ஜியம் எப்படி இருந்ததோ இல்லையோ.. யாமொன்றும் அறியோம் பராபரமே..ஆனால் நம்முடைய முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் எல்லாமுமான ஆட்சியாக இருக்கிறது என்று கூறினார். சட்டசபையில் புறாநானூறு, கம்பராமாயணம், திருப்பாவை என பாடி முதல்வரின் முகத்தில் புன்னகை பூக்க வைத்தார் தங்கம் தென்னரசு.

சட்டசபையில் கடந்த 19ஆம் தேதி பட்ஜெட் உரை வாசித்த தங்கம் தென்னரசு திருக்குறள் தொடங்கி ஆண்டாளின் திருப்பாவை வரை பாடி சட்டசபையில் பலரின் பாராட்டினை பெற்றார். இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை சங்க இலக்கியங்களையும், கம்ப ராமாயணத்தையும் மேற்கோள் காட்டி பேசினார்.

Thangam Thennarasu compared the Rama Rajya to the Dravida model government in TN assembly

இன்று சட்டசபையில் பட்ஜெட் உரை குறித்து விளக்கம் அளித்து பேசிய தங்கம் தென்னரசு.. கடன் என்றால் கடமை என்ற பொருளும் இருக்கிறது. புறநானூற்றுப்பாடலில் சமூகத்தில் ஒவ்வொருக்கு என்ன கடன் இருக்கிறது என்று பாடியிருக்கிறார்கள்

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

என்று ஒவ்வொருக்கும் உரிய கடனை புறநானூறு வகுத்து தந்திருக்கிறது. அந்த வகையில் யாருக்கு என்ன கடன் இருக்கிறதோ இல்லையோ நமது முதலமைச்சர் ஒரு கடன் வைத்திருக்கிறார்.

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்:
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.

மன்னன் தாம் உயிரென்பதாக கருதி நாட்டு மக்களை இந்த நாட்டு மக்களை ஆட்சி செய்பவர். தமிழ்நாட்டு மக்களை உயிராக கருதி தான் அவர்களுக்கு உயிராக இருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அவருடைய கடனாக கருதுவது வள்ளல் பெருமான் சொன்னது போல என் கடன் பணி செய்து கிடப்பதே என் பணி செய்வதையே தன்னுடைய கடனாக கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நான் இந்த நேரத்தில் வணங்க கடன் பட்டிருக்கிறேன். அவருடைய நல்லாட்சியை திராவிட மாடல் ஆட்சியை நாம் அனைவரும் போற்றி பாராட்ட வேண்டும்.

கம்ப ராமாயணத்தில் கோசல நாட்டின் வளம் குறித்து கம்பர் பாடியிருக்கிறார்.

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்.

கோசல நாட்டில் அங்கே வறுமை என்பதே இல்லை ஆகையால், வள்ளல்களின் சிறப்பு வெளியே தெரிவதில்லை. எதிரிகள், நாட்டின்மேல் போர்தொடுத்து வருபவர்கள் என்று யாருமே இல்லாத காரணத்தால், நாட்டின் வீரர்களுக்குத் தங்களுடைய பராக்கிரமத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பமே இல்லை.

பொய் பேசுபவர்கள் யாருமே இல்லை. ஆகவே, உண்மை என்பது தனிச்சிறப்பு உள்ள ஒன்றாகக் கருதப்படவில்லை. எல்லோரும் பல பெரியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட கேள்விச் சிறப்பு கொண்டவர்களாக இருந்ததால், 'இன்னார் அறிவில் சிறந்தவர்' என்று தனித்துச் சொல்லப்பட யாருமே இருக்கவில்லை.

பேரவைத்தலைவர் அவர்களே.. ராம ராஜ்ஜியம் எப்படி இருந்தாதோ இல்லையோ.. யாமொன்றும் அறியோம் பராபரமே..ஆனால் நம்முடைய முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் எல்லாமுமான ஆட்சியாக இருக்கிறது என்று நான் சொல்லுவேன். அந்த நல்லாட்சியிலே..

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

மேடம் பசுக்கள்.. என்று வானதி சீனிவாசனைப் பார்த்து சொல்லி விட்டு திருப்பாவையை தொடர்ந்து பாடி முடித்தார் தங்கம் தென்னரசு. இந்த திராவிட மாடல் ஆட்சி எல்லா வகையிலும் நிறைந்திருக்கக் கூடிய ஆட்சியாக இருக்கிறது. நிதிவளத்தையும் இயற்கை வளத்தையும் மேம்படுத்தி செயல்படுத்தும் என்று நம்பிக்கையுடன் கூறினார் தங்கம் தென்னரசு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+