எப்போ பாரு கரண்ட் போகுது.. என்னதான் நடக்குது.. கொதித்த பி.சி.ஸ்ரீராம்.. கூலாக்கிய தங்கம் தென்னரசு
சென்னை: மின்வெட்டு குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் போட்ட புகார் ட்வீட்டுக்கு மின்சாரத் துறை (கூடுதல்) அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கோடை காலத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகும். 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பல முறை மின்வெட்டு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பல தொழிற்சாலைகள் இயங்க முடியாமலும் தொழிலாளர்களுக்கு வேலைத் தர முடியாமலும் இருக்கும் சூழல் நிலவியது.

இந்த நிலையில் மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த போதும் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் கோடை தொடங்குவதற்கு முன்பே சில இடங்களில் மின் வெட்டு குறித்து மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் கேட்ட போது மின்வயர்களை அணில் கடித்துவிடுவதால் மின் தடை ஏற்படுகிறது என தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த விளக்கம் விவாதத்துக்குள்ளானது. இந்த நிலையில் கோடை தொடங்கியதும் கிராமப்புறங்களில் மணிக்கணக்கில் மின்வெட்டு ஏற்படுவதாகவும் தகவல்கள் வந்தன. இதை மின்சாரத் துறை அமைச்சகம் மறுத்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தேவர் மகன், அலைபாயுதே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பி.சி.ஸ்ரீராம் தங்களது பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தனது ட்விட்டரில் முதல்வரை டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சாந்தோம், ஆழ்வார்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. என்னதான் நடக்கிறது என பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த புகாருக்கு மின்சாரத் துறை அமைச்சர் (கூடுதல் பொறுப்பு) தங்கம் தென்னரசுவும் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். சென்னை முழுவதும் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் பணிகள் நடப்பதால் மின் விநியோகத்தில் சில தடங்கல்கள் ஏற்படுகின்றன. சிரமத்திற்கு வருந்துகிறோம் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை தமிழகம் என குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்த போது பி.சி.ஸ்ரீராம் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
அந்த வகையில் பி.சி.ஸ்ரீராமும் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அவர் ட்வீட்டில் "ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல நடந்து கொள்கிறார். இந்த தேர்தலில் அவருடைய எஜமானர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அதனால் அவரை பயம் பற்றிக் கொண்டிருக்கிறது. தற்போதைய யுத்தம் என்பது பிரிவினைவாதத்திற்கும், வெறுப்புப் பேச்சிற்கும் எதிரானது. ஆளுநர் பதவி விலக வேண்டும். அவரின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications