மலைக்குறவர் விசாரணைக் கைதி மரண வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
சென்னை: மலைக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த விசாரணைக் கைதி தங்கமணி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக கூறி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் நீதித் துறை நடுவர் முன்பு தங்கமணியை ஆஜர்படுத்திய போலீசார் திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
விசாரணை கைதி தங்கமணி திடீரென உயிரிழந்தது எப்படி.. சட்டசபையில் விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
மருத்துவமனையில் மரணித்த தங்கமணி
இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு 7:40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் ஒரு மணி நேரத்திலேயே தங்கமணி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதனையறிந்த தங்கமணியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தங்கமணியை தாக்கி கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறைக் கைதியின் மரணத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பிரேத பரிசோதனை
தங்கமணி மரணம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க சென்றபோது உறவினர்களை உள்ளே அனுமதிக்காமல் அலுவலக கதவுகள் மூடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக குற்றவியல் நடுவர் பாக்கியராஜ் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அவரது முன்னிலையிலேயே பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கேள்வி
தங்கமணி சிறை காவலில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கேள்வி எழுப்பினார். "சென்னையை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த தங்கமணி என 2 சிறைக் கைதிகள் ஒரே வாரத்தில் போலீஸ் விசாரணையில் இறந்துள்ளனர்." என அவர் தெரிவித்தார்.
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதித்துறை நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்று உள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் அவை முன் தெரிவிக்கப்படும் என்றார். இந்த நிலையில், தங்கமணி மர்ம மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.