தலைநிமிரும் தஞ்சாவூர்.. சென்னைக்கு இணையாக.. இனி ஆகாயத்திலும் பறக்கலாம்.. ராஜாவால் அடிக்கும் ராஜயோகம்
சென்னை: சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக இனிமேல் தஞ்சாவூரிலும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பின் மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு சேவையைத் தொடங்கி உள்ளது, முதல் விமானம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும். தினமும் காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.30 மணிக்கு சேலம் சென்றடையும்.
விமான நிலையம்: பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானம் 1.45 மணிக்கு இங்கு தரையிறங்கும். டிக்கெட் முன்பதிவுகளின் அடிப்படையில் நாளொன்றுக்கான சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும், டிக்கெட் விலை 2,390 ரூபாயிலிருந்து தொடங்கும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
திருச்சி விமானம்: தற்போது புதிய விமான சேவைகளும் திருச்சிக்கு கிடைக்க தொடங்கி உள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த சேவை மூலம் 1 மணி நேரம் 15 நிமிடத்தில் பெங்களூருக்கு செல்ல முடியும். இரவு 12.15 மணிக்கு இந்த சேவை மேற்கொள்ளப்படுகிறது.
ஒன்றரை மணிக்கு நள்ளிரவில் இந்த விமானம் பெங்களூரை அடையும். இது தினசரி சேவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கண்ணை மூடி திறக்கும் முன் பெங்களூருக்கு எளிதாக திருச்சியில் இருந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருச்சியில் இருந்து பெருநகரங்களுக்கு தற்போது பயணம் மிக எளிதாகி உள்ளது.
திருச்சியில் தற்போது புதிய விமான நிலைய முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் முடிந்ததும் விரைவில் கூடுதல் விமானங்கள் இங்கே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர்: இந்த நிலையில்தான் சென்னை, திருச்சி, கோவைக்கு இணையாக இனிமேல் தஞ்சாவூரிலும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
அதில், தஞ்சையில் விரைவில் விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கே பல நிறுவனங்கள் குவிய தொடங்கி உள்ளன. டெல்டா மாவட்டங்களை ஸ்டார்ட் அப் ஹப்பாக மாற்றும் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
ஐடி பார்க் இங்கே வருகின்றன. இதனால் விவசாய மக்களுக்கு பாதிப்பு இல்லை. இங்கே உள்ள இளைஞர்கள், இளைஞிகள் பலன் அடைவார்கள். அதேபோல் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை இங்கே கொண்டு வரப்படும். மாசை ஏற்படுத்தாத தொழிற்பேட்டைகள் இங்கே கொண்டு வரப்படும்.
எந்த மாசும் இல்லாத தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்படும். தஞ்சைக்கு விமானம் கொண்டு வரப்பட வேண்டும் என்பது அரசின் பல ஆண்டு கனவு. இதற்காக விரைவில் அறிவிப்புகள் கொண்டு வரப்படும். ஒரு காலத்தில் இங்கே விமான சேவை இருந்தது. இந்த நிலையில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications