தமிழகத்தில் பாஜகவுக்கு கல்தா.. மோடி ரோடு ஷோ நடத்தியும் தந்தி டிவி கணிப்புகளில் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லாது என தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்புகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளுக்கும் புதுவையில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் இத்தனை நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. பொதுவாக மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓயும். ஆனால் இந்த முறை கோடை வெயில் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நிலையில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெல்லும் என்பது குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை நடத்தப்பட்ட அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியானது.
அதன்படி திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றால் மத்திய சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், சிதம்பரம், விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், தருமபுரி, கன்னியாகுமரி, வடசென்னை, கரூர் ஆகிய 29 தொகுதிகள் திமுக கூட்டணி வசம் செல்ல வாய்ப்புகள் அதிகம்.
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதி என்றால் அது புதுவை மட்டும்தான் என கருத்துக் கணிப்பு சொல்கிறது. அதாவது பாஜக, தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லாது என்கிறது இந்த கணிப்பு. பாஜக மொத்தம் 19 இடங்களில் போட்டியிடுகிறது. அதாவது திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
அது போல் புதுவையில் ஒரு இடத்தில் மட்டும் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில் அங்கு பாஜக எளிதாக வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் இருந்து எப்படியும் கணிசமான எம்பிக்களை அனுப்புவோம் என சொல்லி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது பெரும் ஏமாற்றத்தை தருவதாகவே இந்த கணிப்புகள் உள்ளன.
திருப்பூர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்து பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஆனாலும் அந்த தொகுதிகளில் பாஜக வெல்லாது என்றே கணிப்புகள் கூறுகின்றன. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக வலிமையானதாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் அங்கு அக்கட்சி சோபிக்காது என்றே தெரிகிறது. மேலும் பெரியார் மண்ணில் தாமரை மலராது என திமுகவும் கூட்டணி கட்சியினரும் அவ்வப்போது அருதியிட்டு கூறி வந்தனர். அது இந்த கருத்துக் கணிப்புகளில் பலித்துள்ளதாகவே கருதப்படுகிறது. எதுவாக இருந்தாலும் கருத்துக் கணிப்புகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். எனவே ஜூன் 4 ஆம் தேதி அன்றுதான் இந்த கணிப்புகள் பலிக்குமா, இல்லை பொய்க்குமா என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications