தமிழகத்தில் ராகுலுக்கு மக்கள் ஆதரவு! ஆனால் 42 % பேருக்கு புரிந்த அந்த யதார்த்தம்! தந்தி டிவி சர்வே!
சென்னை: தமிழகத்தில் ராகுலுக்குத்தான் அதிகம் ஆதரவு இருக்கிறது என்கிற போதிலும் மத்தியில் ஆட்சியில் யார் வருவார்கள் என்ற கேள்விக்கு தந்தி டிவி சர்வேயில் மக்கள் அளித்த பதில் என்ன தெரியுமா?
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இந்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்து வருகிறது. தற்போதுள்ள அரசியல் சூழலில் யாருக்கு மக்கள் செல்வாக்கு என்பதை அறிய முற்படும் தேர்தலாகவும் இது இருக்கிறது.

அது போல் திமுக, அதிமுகவை தாண்டி பாஜகவுக்கு எத்தனை செல்வாக்கு இருக்கிறது என்பதை விவரிக்கும் தேர்தலாகவும் இது இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றாகிவிட்டது.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க முனைப்பு காட்டினாலும் பாஜக, அவர்களை வளைத்து போடாமல் விடாது என்பதற்காக தமிழகத்தில் இதுவரை எந்த வேட்பாளரையும் அறிவிக்காமல் உள்ளது. ஆனால் அதிமுகவோ தெளிவாக இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணி தமிழகம், புதுவையில் 39 இடங்களில் வென்றது.
அதே போன்றொரு வெற்றிக் கூட்டணியுடன் 2024 லோக்சபை தேர்தலை சந்திக்க போகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் கொடுத்த நீட் தேர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகம் இருக்கிறது, மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விமர்சனங்களுடன் இந்தத் தேர்தலை திமுக சந்திக்க போகிறது.
இந்த நிலையில் மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் வெல்லப் போவது யார் என தந்தி டிவி கடந்த பிப்ரவரி மாதம் பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமராக வர போகிறார்கள் என்ற கேள்விக்கு 63 சதவீதம் பேர் ராகுலுக்கும் 33 சதவீத பேர் ராகுலுக்கும் ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.
கடந்த மே மாதம் முதல் இந்த கேள்வி கேட்கப்பட்ட நிலையில் 71 சதவீதமாக இருந்த ராகுலின் செல்வாக்கு படிப்படியாக ஏறுவதும் இறங்குவதுமாக குறைந்து கடைசியில் 63 சதவீதத்திற்கு வந்துள்ளது. அது போல் மே மாதம் மோடி பிரதமராக விருப்பம் என 27 சதவீதம் பேர் சொல்லியிருந்தாலும் அது படிப்படியாக அதிகரித்து இந்த பிப்ரவரியில் 33 சதவீதம் வரை வந்துள்ளது.
அதாவது மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவதையே அதன் கிராஃப் காட்டுகிறது. இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழக மக்கள் ஆம் என 42 சதவீதம் பேரும் இல்லை என 56 சதவீதம் பேரும் கருத்து இல்லை என 2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதனால் தமிழகத்தை பொருத்தமட்டில் ராகுல் காந்திக்குதான் தமிழக மக்கள் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாது என்று நினைப்பதையே 42 சதவீதம் பேர் பாஜகதான் மறுபடியும் ஆட்சிக்கு வரும் என சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது.
ராகுல் பிரதமராக வர வேண்டும். ஆனால் காங்கிரஸ் கூட்டணியால் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்ற யதார்த்தத்தையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளது சர்வே முடிவுகளை காட்டுகிறது.












Click it and Unblock the Notifications