தண்ணீர் பிரச்சனையை தீர்க்காமல் யாகம் நடத்துவது கையாளாகாத தனம்.. தமிழக அரசை தாக்கிய மா.சுப்பிரமணியம்
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசும், அமைச்சர்களும் யாகம் நடத்தி வருவது கையாளாகாத நிலையை எடுத்து காட்டுவதாக உள்ளது என திமுக குற்றம்சாட்டியுள்ளது.
பருவமழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி காணப்படுகிறது. போர்களும், கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன. பொதுமக்கள் தனியார் லாரி குடிநீரை, இமாலய விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் நிலைமையோ இன்னும் மோசம். காசு கொடுத்து தண்ணீர் வாங்க தயாராக இருந்தால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் அதிமுக அரசின் நிர்வாக குறைபாடு மற்றும் அலட்சியம் காரணமாகவே, கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறி திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்த வகையில் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் திமுகவை சேர்ந்த சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரான மா.சுப்பிரமணியம் தலைமையில், அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வினருடன், ஏராளமான பொதுமக்களும் காலி குடங்களுடன் பங்கேற்றனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ள தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியம், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த மார்ச் மாதம் முதலே குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை அடைந்துவிட்ட நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு இதுவரை என்ன செய்தது என வினவினார். மேலும் நீர் தட்டுப்பாட்டை போக்க அரசு இனி எடுக்க போகும் நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
குடிநீர் பிரச்சனையை போக்க புதிய நீர் ஆதாரங்கள் கண்டறியப்பட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக அரசு கூறியது. புதிய நீராதாரங்களாக அரசு கூறிய குவாரிகளில் இருந்து, மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக நீர் எடுக்கப்படுகிறது. ஆனால் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சமீபத்தில் பேசியுள்ளார்.
அரசின் அங்கமாக இருக்கும் அமைச்சரே இவ்வாறு முன்னுக்கு பின் முரணாக பேசுவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என அமைச்சர் வேலுமணி கூறுகிறார். இதுபோன்ற போராட்டங்கள் அவரது கண்ணுக்கு தெரியவில்லைய. மக்களின் போராட்டங்கள் மூலம், அதிமுக அரசு மிக விரைவில் துடைத்தெறியப்பட வேண்டிய சூழல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை போக்க நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்காமல், யாகம் நடத்துவது என்பது என்ன மாதிரியான நடவடிக்கை.
தமிழக அரசு மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்தி வருகிறது. கையாளாகாதவர்கள் தான் யாகம் நடத்துவார்கள். ஒரு அரசே யாகம் செய்வது அதன் கையாளாகத்தனத்தையே காட்டுவதாக மா.சுப்பிரமணியம் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications