சென்னை தாம்பரம் மக்களுக்கு 16 வருட கனவு சார்.. பரங்கிமலையில் 3 மாதத்தில் நடக்க போகும் அற்புதம்
சென்னை: சென்னை வேளச்சேரி - பரங்கிமலை வரையிலான ரயில் வழித்தடத்தை 3 மாதங்களுக்குள் தயார் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது ஆதம்பாக்கத்தில் சரிந்த ரயில்வே பாலத்தின் பகுதி அகற்றப்பட்டுள்ளது. இங்கு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயிலை பரங்கிமலை வரை நீட்டிக்க கடந்த 2007ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதன்படி, வேளச்சேரி-பரங்கிமலை இடையே மேம்பால ரயில் பாதை திட்டப்பணி 2008-ல் தொடங்கியது. இந்த திட்டம் சென்னைக்கு மிக மிக முக்கியமான திட்டம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. ஐடி நிறுவனங்கள் அதிகமுள்ள வேளச்சேரிக்கு தாம்பரம் கிண்டி வழியாக ரயிலில் செல்ல இந்த பாதை மிக முக்கியம் என்கிற நிலையில் பணிகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கியது.

சென்னை வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ.க்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகளில் வேளச்சேரியில்இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம், ரயில் பாதை கட்டுமானப் பணிகள் 4.5 கி.மீ. தூரத்துக்கு முடிவடைந்துள்ளன. வெறும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலப்பிரச்சனை காரணமாக 10 ஆண்டுகள் அப்படியே திட்டம் முடங்கியது.
நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து இந்த தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ.தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருக்கிறது. தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில் தூண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வந்தது.
இதற்கிடையே, 156 மற்றும் 157-வது தூண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டு ஒரு பக்க இரும்பு சாரம் அகற்றப்பட்டிருந்து. இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு, அந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பெரும் சப்தத்துடன் கீழே விழுந்து,3 அடி ஆழத்துக்கு சாலையில் புதைந்துவிட்டது. நல்ல வேலையாக அப்போது யாரும் அந்த பாதையில் போகாததால் அசம்பாவிதம் நிகழவில்லை. இந்த மேம்பாலத்தை தாங்குவதற்காக தூணில் ஹைட்ராலிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டிருந்த நிலையிலும் பாலம் சரிந்து உடைந்துவிட்டது.
இதனிடையே பாலம் விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய, ஐஐடி நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து, அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அதேநேரம் சரிந்து உடைந்த பாலத்தை அகற்றும் பணி கடந்த மாதம் தான் தொடங்கியது. இந்த பாலத்தை பிரம்மாண்ட இயந்திரங்கள் வாயிலாக உடைத்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி தற்போது, முடிந்துவிட்டது.. இங்குசீரமைக்கும் பணி நடைபெறுகிறது.
மேலும், புதிய கர்டர் மூலமாக பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்கு 3 மாதங்களில் புதிய கர்டர் நிறுவப்படும் என்றும் தொடர்ந்து, மேம்பாலப்பணி நிறைவடையும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். வேளச்சேரி - பரங்கிமலை வரையிலான வழித்தடத்தை 3 மாதங்களுக்குள் தயார் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications