அமைச்சர் மதிவேந்தனிடமிருந்து சுற்றுலாத் துறை பறிப்பு பின்னணி! தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது!
சென்னை: அமைச்சர் மதிவேந்தனிடமிருந்து சுற்றுலாத் துறையை பறித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு வனத்துறையை ஒதுக்கியுள்ளார்.
இதற்கு காரணம் அமைச்சர் மதிவேந்தனின் செயல்பாடுகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் மீது முதல்வருக்கு திருப்தி இல்லாததே ஆகும்.
சுற்றுலாத் துறை மூலம் எவ்வளவோ சாதித்திருக்க முடியும் என்ற நிலையில் அதனை அமைச்சர் மதிவேந்தன் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

அமைச்சர் மதிவேந்தன்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான மதிவேந்தனுக்கு, சுற்றுலாத்துறை என்ற வளம் கொழிக்கும் துறையை ஒதுக்கீடு செய்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். படித்தவர், மருத்துவர் என்பதால் சுற்றுலாத் துறையை சிறப்புடன் நிர்வகிப்பார் என எதிர்பார்த்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்களால் அதிருப்தி கொண்டார்.

அமைச்சரவை மாற்றம்
இதனால் அமைச்சரவை மாற்றத்தின் போது மதிவேந்தன் மீண்டும் இடம்பெறுவாரா என்றெல்லாம் திமுகவில் பேச்சுக்கள் எழுந்தன. அந்தளவு நிலைமை மோசமாக இருந்தது. இதனிடையே தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற முதுமொழிக்கு ஏற்ப அமைச்சரவையிலிருந்து நீக்காமல் துறையை மட்டும் மாற்றிக் கொடுத்து மீண்டும் ஒரு சான்ஸ் வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இவரிடம் இருந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் அவர் வசம் இருந்த வனத்துறை மதிவேந்தனுக்கும் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

நிம்மதி பெருமூச்சு
இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள அமைச்சர் மதிவேந்தன், தனக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள வனத்துறையில் பல சாதனைகளை புரிந்து முதல்வரின் பாராட்டுக்களை பெற்றே தீர்வது என முடிவெடுத்துள்ளாராம். இதனிடையே சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளதால் அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பு ஹேப்பியாக வலம் வரத் தொடங்கியுள்ளது. இவர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவி பொருத்தமானதாக பார்க்கப்படுகிறது.

தீவிர கண்காணிப்பு
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை ஒவ்வொரு அமைச்சரின் நடவடிக்கைகள் மற்றும் துறை ரீதியான பணிகளில் அவர்கள் காட்டும் அக்கறைகளை தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications