முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பகிர்ந்த வழக்கு.. முன்னாள் டிஜிபி நடராஜூக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வாட்ஸ் அப் குழுவில் அவதூறு பகிர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அந்த தகவலுக்கும் தனக்கும் தொடர்பில்லை, முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளதாக முன்னாள் டி.ஜி.பி நடராஜ் மனு தாக்கல் செய்ததுடன், வருத்தம் தெரிவித்தால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீதிபதி அதிரடியான உத்தரவும் பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்த நடராஜ், 2016 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். இந்த நிலையில், வாட்ஸ் அப் குழு ஒன்றில் இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும் இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு பொய்யான செய்தியை நடராஜ் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீலா அளித்த புகார் மனு அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதக்கலவரத்தை தூண்டி விடுதல், அவமதித்தல், வதந்தி பரப்புதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எடுத்து முன்னாள் டிஜிபி நடராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றிருந்தார்..
இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் டிஜிபி நடராஜ் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக முதல்வர் மீது தனிப்பட்ட மரியாதை கொண்டுள்ளதாகவும் தன் மீதான வழக்கு எதிர்பார்க்காத ஒன்றும் அந்த வாட்ஸ் அப் தகவலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,அதை தான் அங்கீகரிக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்போது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பி. எஸ் .ராமன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, இந்தப் பிரமாண பத்திரத்தை அதே வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டு அதன் நகலை காவல்துறைக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், முன்னாள் டி.ஜி.பி நடராஜ் வருத்தம் தெரிவித்துள்ளதால், 24 மணி நேரத்திற்குள் அதே வாட்ஸ் அப் குரூப்பில்ர பிரமாணம் பத்திரத்தை பதிவிட்டு உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications