3 ஆண்டு சிறை! பொன்முடி, அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், பொன்முடி, அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பொன்முடி. இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2017ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட, 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணையின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு தரப்பில் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் சமர்பித்தார்.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடி மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்வதாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்.
குறிப்பிட்ட காலக் கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பொன்முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறிய நீதிபதி, தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை டிச.21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதனையடுத்து டிச.21ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார்.
மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தது என்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேபோல, இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்கு மனு மீண்டும் விரைவில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications