நீதிபதிகள் நியமனத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க கூடாது..ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சிக்க கூடாது என, ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி போன்று இந்திய நீதித்துறை பணி என்ற புதிய பிரிவை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரங்களை முற்றிலுமாக பறிக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் போட்டித்தேர்வுகளை நடத்தி நீதிபதிகளை தேர்வு செய்வதும், அவர்களை இந்தியாவின் எந்த பகுதியிலும் நியமிக்க வகை செய்வதும் தான் மத்திய அரசின் நோக்கமாகும்.
#ReleaseNandhini நந்தினியை விடுதலை செய்.. இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
இதுகுறித்து மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கருத்துகளை கேட்க மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும், உயர்நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்களுக்கும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர்அலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த ஜூன் 19-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்று தேசிய நீதித்துறை பணியாளர் தேர்வாணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்; அதன் மூலம் கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டம் புதியதல்ல. ஏற்கனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2009-ம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால், அதில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் 2013-ம் ஆண்டு நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அதிலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. மத்திய அரசு அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வரும் ஒற்றைக் கலாச்சாரத்தை நீதித்துறையிலும் திணிக்க விரும்புவதன் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை. இது நல்லது அல்ல.
மறைமுகமாக மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். மத்திய அரசு திணிக்க முயலும் புதிய முறைப்படி தேசிய அளவில் போட்டித் தேர்வுகள் மூலமாக கீழமை நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களின் தேர்ச்சி தரவரிசை, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மாநிலப் பிரிவு வழங்கப்படும். அவர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உயர்நீதிமன்ற பரிந்துரைப்படி பணியமர்த்திக் கொள்ளலாம்.
இது இ.ஆ.ப., இ.கா.ப. உள்ளிட்ட அதிகாரிகளை பணியமர்த்துவதற்காக கடைபிடிக்கப்படும் முறை தான் என்றாலும் கூட, கீழமை நீதிபதிகள் நியமனங்களை இவ்வாறு செய்வதில்நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நீதிபதி பணிக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
ஆந்திரா, மும்பை, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களும் தேசிய அளவிலான நீதிபதிகள் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் மேலாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்வது மிகப்பெரிய அதிகார ஆக்கிரமிப்பு ஆகும். இது மக்களாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்காது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கீழமை நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க கூடாது. இதற்கு முன் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறை நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் தான் பெரும் சீரழிவை சந்தித்தது. நீதித்துறைக்கும் அதே போன்ற நிலை ஏற்பட அனுமதிக்க கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.