3.5 கோடி பேருக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் முதல் மத்திய அரசின் புதிய திட்டம்.. பிஃஎப் அதிகாரி பேட்டி
சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, மத்திய அரசின் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கூறினார். இந்த திட்டத்தின் மூலம் 3½ கோடி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு உற்பத்தி துறை தான் முதுகெலும்பு. எனவே அதில் சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறது மத்திய அரசு. அந்த வகையில் அனைத்து உற்பத்தி சார்ந்த துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டப்படி அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்க மத்திய அரசு விரும்புகிறது.

ஊக்கத்தொகை
அதற்காக வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்க போகிறது. முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.15,000 வரை கிடைக்கும். அதேபோல், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. உற்பத்தித் துறைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் 5 திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடி ஆகும்.
சென்னையில் பேட்டி
இந்த திட்டம் பற்றி சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இ.எல்.ஐ. திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஒப்புதல்
இத்திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3½ கோடி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை கிடைக்க போகிறது.இத்திட்டத்தின் மூலம் அமைப்புசாரா தொழில்துறைகளில் உள்ளவர்கள் அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட இருக்கிறார்கள்.
இதனை தகுதியான அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டம் வேலைவாய்ப்புக்கு செல்லும் இளைஞர்களுக்கு பயனளிப்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும். இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழிலாளர்களை சேர்க்கும் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
சம்பளம்
அதன்படி, ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஆயிரம் ரூபாய் வீதமும், ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளத்தில் தொழிலாளர்களை சேர்க்கும்போது ரூ.2 ஆயிரம் வீதமும், ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் வரையிலும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் இருக்கிறது" இவ்வாறு விஜய் ஆனந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications