கன்னிமாரா நூலகத்தில் ஏலத்துக்கு வரும் ''பொக்கிஷங்கள்''.. சென்னையின் பெருமை பேசும் சின்னம்!
சென்னை: சென்னை பெருநகரின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக திகழும் நூற்றாண்டு பழமை வாய்ந்த கன்னிமாரா நூலகத்தில், வரும் 12ஆம் தேதி வரலாற்றை தாங்கி நிற்கும் பழைய பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.
மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபுவால் கடந்த 1890ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1896ஆம் ஆண்டு நூலகம் திறக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான நூலகம் என்ற பெயரைத் தாங்கி நிற்கும் கன்னிமாரா நூலகத்தின் கலையழகும், கட்டிடவியல் வேலைபாடுகளும் காலத்தால் அழியாத காவியம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு கலை நுணுக்கத்தோடு கட்டிடம் இழைக்கப்பட்டிருக்கும்.

நூற்றாண்டுக்கு முன்னரே இந்த நூலகத்தை கட்டி முடிக்க ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் எந்தளவுக்கு உறுதியான பொருட்களும், மர வேலைப்படுகளும் இருந்திருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளலாம். புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரிகள் எல்லாம் தேக்கு மரங்களால் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் மேல் விதானங்களை பற்றி சொல்லவே தேவையில்லை, அந்தளவுக்கு கலையழகையும், கலைநுட்பத்தையும் காணலாம்.

இப்படிச் சொன்னால் சொல்லிக்கொண்டே இருக்கலாம் என்ற பெருமைக்குரிய கன்னிமாரா நூலகத்தில் தான் ''பழைய பொக்கிஷங்கள்'' வரும் 12ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; ''கன்னிமாரா பொது நூலகத்திலுள்ள பழைய உபயோகமற்ற பயன்படுத்த இயலாத மரத்தளவாடங்கள், மின்பொருட்கள் மற்றும் இதர பொருட்களை இருப்பு நீக்கம் செய்ய அப்பொருட்களை உள்ளது உள்ளபடி 12.01.2024 அன்று காலை 10.00 மணி அளவில் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது.''

''இதன் முழு விவரத்தினை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர், சென்னை -8. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண். 044 - 28193751 ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். '' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பழைய பொருட்களை சேகரித்து வைக்கும் நிறுவனங்களோ/ தனி நபர்களோ பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications