கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்த மனு டிஸ்மிஸ்! பக்தர்கள் விருப்பமே முக்கியம்- ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த மாதம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார். தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தப்புத்தான்.. உங்களை விட்டுட்டு கேஸ் பக்கம் போனது தப்புத்தான்.. அதுக்காக எரியாம இருந்துடாதீங்க!
பெரிய கோவில்களில் அறிமுகம்
முதல்கட்டமாக வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 47 பெரியகோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள539 முக்கிய கோயில்களில் 'அன்னை தமிழில் அர்ச்சனை'செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார்.
இன்று விசாரணை
இந்த நிலையில், அரசு உத்தரவை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை
அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், 1998ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளதாகவும், கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது எனவும், மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.
மொழி பக்தர்கள் விருப்பம்
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2008ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மறு பரிசீலனை தேவையில்லை
மேலும் அந்த உத்தரவில் நீதிபதிகள், ஏற்கனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது எனவும், ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்ய தேவையில்லை எனவும், இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.