அறிவிச்சாச்சு... அடுத்து என்ன செய்யப் போகிறோம்... துறைச் செயலாளர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை..!
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தக் கூட்டத்தில் அரசு உயரதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழும், துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போதும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகள் அனைத்தும் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விடாமல் அதனை செயல்படுத்த வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுகிறார் ஸ்டாலின்.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் எந்த ஒரு திட்டமும் அறிவிப்போடு மட்டும் நின்றுவிடாது எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளே தாமே நேரடியாக கண்காணிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகள் ஏராளமானவைகள் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளன. அது போன்ற ஒரு நிலை தனது ஆட்சிக்காலத்தில் வரக்கூடாது என விரும்பும் ஸ்டாலின், ஓய்வின்றி அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பணிகளை தொடங்குகிறார்.
மேலும், இதற்காக சிறப்புக் குழு ஒன்றை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செய்ய வேண்டும் என்பது முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணவோட்டமாக உள்ளது.
அறிவிப்புகளை எவ்வாறு செயல்படுத்துவது, அதற்கான செயல்வடிவத்தை எப்படி உருவாக்குவது, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களின் பங்கு அதிகம் உள்ளதால் அவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்துவது என இனி வரும் நாட்களில் இதில் பிஸியாக உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதன் காரணமாக கட்சிக்காரர்களிடம் இருந்து வரும் புகார்கள் மற்றும் பஞ்சாயத்துக்களை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகளான துரைமுருகன், ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்டோர் கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் சென்றடையாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications