தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகள் அரியணையில் அமர போவது யார்?.. நாளை விறுவிறு வாக்கு எண்ணிக்கை!
சென்னை: தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலில் திமுக கூட்டணி-அதிமுக கூட்டணி நேரடியாக மோதின. மக்கள் நீதி மய்யம், அமமுக கூட்டணியும் களமிறங்கின. நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்கியது. இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன. இதனால் நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்க உள்ளது.

கொரோனா தடுப்பு முறைகள்
சென்னையில் உள்ள 3 மையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றபடுவதால் அனைத்து வாக்கு மையங்களிலும் கூடுதல் மேஜைகள் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால்தான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதி அளிக்கப்படாது.

அரியணையில் அமரப் போவது யார்?
காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த முறை கொரோனா தடுப்பு முறைகள் காரணமாக இறுதி முடிவுகள் தேறிய நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியிடப்படும். தமிழகத்தை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப்போவது யார்? என்பது நாளை தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications