விஜய் முதல்வராக கடைசி நேரத்தில் உதவிய டெல்லி டீம்.. ஆதவ் அர்ஜுனாவை பாராட்டிய அபிஷேக் சிங்வி
சென்னை: கடந்த 7 முதல் 10 நாட்களாக இந்தச் சோதனையான காலத்தில், இளம் முதல்வர் (விஜய்) மற்றும் அவரது துடிப்பான சகாக்களுக்கு (ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர்) ஆலோசனை வழங்கி, ஆய்வுகள் மேற்கொண்டு எனக்கு உதவியாக இருந்த எனது இளம் குழுவினருக்குப் பாராட்டுக்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் , உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி பாராட்டி உள்ளார். அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி, இந்தப் புதிய முதல்வர் (விஜய்) ஆதரவிற்கு உரியவர் என்றும் அபிஷேக் சிங்வி புகழ்ந்துள்ளார்.
" விஜய்யை தடம் புரளச் செய்யவும், ஆட்சியை நிலைகுலையச் செய்யவும் நடக்கும் முயற்சிகள், அதைச் செய்யும் வெளிநபர்களுக்குப் பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும். ஏனெனில், மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றும் அபிஷேக் சிங்வி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருந்தார்.

நேற்று (மே 10) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் 18 வது முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விஜய் மாற்றி அமைத்துள்ளார். திராவிடம் இல்லாத ஆட்சி இப்போது நடக்கிறது. விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள்,விசிக, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த சூழலில் மூத்த காங்கிரஸ் தலைவரான சிங்வி, விஜய்யின் அரசாங்கத்திற்குத் தார்மீக மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்கி வந்தார். விஜய் முதல்வராக பதவியேற்க தடுமாறிக் கொண்டிருந்த போது, டெல்லியில் இருந்து வந்த அபிஷேக் சிங்வியின் சட்ட ஆலோசனைக்குழு உதவியது.
ஆதவ் அர்ஜுனாவை இந்த விவகாரத்தில் அபிஷேக் சிங்வி பெயரை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அதேநேரம் புதிய ஆட்சியைச் சீர்குலைக்கச் சில சக்திகள் முயற்சிப்பதையும், அதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதையும் அபிஷேக் சிங்வி மறைமுகமாக எச்சரித்து இருந்தார்.
இது ஒருபுறம் எனில் திருப்பத்தூர் தவெக வேட்பாளர் சேனாதிபதி பவியேற்பதற்கு எதிராக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அப்போது பதவியேற்பில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று தவெக சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "இந்த விவகாரம் தொடர்பாக பெரியகருப்பன் தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும்.
சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது. இதில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டால், அவரை கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்க முடியாது. தடை விதித்தால், மக்கள் உரிமை பாதிக்கப்படும்" என்று கூயிருந்தார். இன்றும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. இன்றும் அபிஷேக் சிங்வியே வாதிடுகிறார்.














Click it and Unblock the Notifications