எடப்பாடி பழனிச்சாமி கோட்டையில் திமுக அபாரம்.. சிக்கனம்பட்டி, தாதாபுரத்தில் அதிமுகவுக்கு பின்னடைவு
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 5 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி ஒன்றியத்தில் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டை என்று அழைக்கப்படுவது வழக்கம்.
இங்குள்ள, ஓமலூர் ஒன்றியம் சிக்கணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த ரங்கநாதன் வெற்றி பெற்று இருக்கிறார்.
1263 வாக்குகள் பெற்று ரங்கநாதன் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

எடப்பாடி ஒன்றியம்
எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த அரசி மாதையன் முன்னிலை பெற்று இருக்கிறார். அரசி மாதையன் 579 வாக்குகளும், அதிமுக ஆதரவு வேட்பாளர் வளர்மதி 425 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அடுத்தடுத்து சுற்றுகளில் திமுக ஆதரவு வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார்.

காஞ்சிபுரம்
இதேபோல காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 01 வார்டு ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் ருத்திரகோட்டி வெற்றி பெற்றுள்ளார். அவர் 2877 வாக்குகளை பெற்றார். பாஜக வேட்பாளர் பொன்மொழியை விட 1674 வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 13 4ம் சுற்று முடிவில் 1,041 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முருகேசன் முன்னிலையில் உள்ளார். முருகேசன் திமுக 1985, அபிராமி அதிமுக 944, மனோகரன் தேமுதிக 60, லலிதா மக்கள் நீதி மையம் 4, கலைச்செல்வன் அமமுக 17, மகேஸ்வரன் சுயேச்சை 13, செல்லாதவை 45, மொத்தம் 3,068 என்ற அளவில் அங்கு வாக்குப் பதிவு உள்ளது.

திமுக கொண்டாட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 6 இடங்களிலும், 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 30 இடங்களிலும் தற்போதைய நிலவரப்படி திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளதை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு திரளான திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் , கோஷங்களை எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications