கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா... டிசம்பர் 20 -ல் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கூட்டணி குறித்தும், தி.மு.க.வின் பிரசார திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 20ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், தி.மு.க. மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் தி.மு.க. செயலாளர்/பொறுப்பாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக உள்ளது. ஏறக்குறைய திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில், மற்ற சில கட்சிகளும் தி.மு.கவுடன் சேர வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் கூட்டணி குறித்தும், தி.மு.கவின் பிரசார திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினறன. அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே பிரசாரம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications